தமிழ்நாட்டின் ஈரோட்டைச் சேர்ந்த "மக்கள் சிந்தனைப் பேரவை" அமைப்பு, சிங்கப்பூரைச் சேர்ந்த மூத்த தமிழறிஞரான பேராசிரியர் சுப.திண்ணப்பனுக்கு 'தகைசால் தமிழ்ச் சான்றோர்' என்னும் விருதை வழங்கி உள்ளது.
அவரது தமிழ்ப் பணிகளைப் பாராட்டி விருது வழங்கப்பட்டது.
கடந்த 18 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் மக்கள் சிந்தனைப் பேரவை அமைப்பு, பல்லாயிரம் பேரை ஈர்க்கும் புத்தகக் கண்காட்சியை ஒவ்வோர் ஆண்டும் ஈரோட்டில் நடத்தி வருகிறது.
இவ்வாண்டு கண்காட்சியில் கடந்த 9ஆம் தேதி நடந்த பன்னாட்டுத் தமிழரங்கத்தில் விருது அளிக்கப்பட்டது.
மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, தென்கொரியா, ஜெர்மனி, ஸ்காட்லாந்து, பிரான்ஸ், மாலத்தீவு, ஜப்பான், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து வந்த 10 தமிழ் அறிஞர்கள் அதில் பங்கேற்றனர்.
முன்னதாக டாக்டர் திண்ணப்பன் தலைமையில் நடந்த சிறப்பு இணை அமர்வில் தமிழ் வளர்ச்சி பற்றிய சிந்தனைகள், செயல்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
டாக்டர் சுப.திண்ணப்பன் தமது ஏற்புரையில் வள்ளுவர் வழங்கும் 'நூல்' பற்றிய சிறப்புகளை சுருக்கமாக விளக்கிப் பேசினார்.
பொதுமக்கள், மாணவர்கள் என 2,000 பேருக்கு மேல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
செய்தி: சிங்கப்பூர் தமிழ்
எழுத்தாளர் கழகம்