தோக்கியோ: கொல்லப்பட்ட முன்னாள் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேயின் அதிகாரபூர்வ இறுதிச் சடங்கு 250 மில்லியன் யென் (2.54 மில்லியன் வெள்ளி) செலவில் நடத்தப்படும் என்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சென்ற மாதம் எட்டாம் தேதியன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது திரு அபே சுட்டுக் கொல்லப்பட்டார். இறுதிச் சடங்கு உடனடியாக நடைபெற்றிருந்தாலும் அதிகாரபூர்வ இறுதிச் சடங்கை அடுத்த மாதம் 27ஆம் தேதியன்று நடத்த ஜப்பான் முடிவு செய்தது. அது இறுதிச் சடங்கு தோக்கியோவின் நிப்போன் புடோக்கான் வளாகத்தில் நடைபெறவுள்ளது.
திரு அபேயின் அதிகாரபூர்வ இறுதிச் சடங்கிற்கான தொகை முழுவதும் அரசாங்க நிதியிலிருந்து ஈட்டப்படும் என்று தற்போதைய ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா கூறினார்.
திரு அபே, ஜப்பானிலும் அனைத்துலக அளவிலும் மிகுந்த மரியாதைக்கு உரியவர் என்றும் அவரின் மறைவுக்குப் பலர் அனுதாபம் தெரிவித்ததாகவும் ஜப்பானின் தலைமை நாடாளுமன்றச் செயலாளர் ஹிரொக்காஸு மட்சுனோ செய்தியாளர் கூட்டத்தில் சொன்னார். அதற்கு உகந்த வகையில் அதிகாரபூர்வ இறுதிச் சடங்கை நடத்த அரசாங்கம் முடிவெடுத்ததாக அவர் குறிப்பிட்டார்.