சென்னை: காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தேமுதிகவின் அரசியல் திருப்புமுனை மாநாடு மாபெரும் வெற்றி பெற்றுள்ளதாக அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் பெருமிதம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில், தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திட தாம் விடுத்த வேண்டுகோளை ஏற்று அனைவரும் மாநாட்டில் கூடியதாகக் குறிப்பிட்டுள்ளார். "இந்த மாநாட்டின் வெற்றி, தேமுதிக நல்லாட்சியைத் தரும் என்ற நம்பிக்கையை தமிழக மக்களிடம் விதைத்திருக்கிறது.
ஒன்றிணைவோம், வென்றிடுவோம் என்ற லட்சியத்தோடு தமிழக அரசியலின் திருப்புமுனை மாநாடு நடந்து முடிந்தாலும், ஊழல் ஆட்சிக்கு எதிரான நம்முடைய செயல்பாடுகள் தமிழகம் எங்கும் ஒரு அதிர்வலையை உருவாக்கி வருகிறது," என விஜயகாந்த் கூறியுள்ளார். தேமுதிகவினர் எடுத்துக்கொண்ட முயற்சியானது, மாற்றாரும் வியக்கும் வண்ணம் மாபெரும் வெற்றியாக நடந்தேறி உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.