உணவு விலைகளும் சேவை
களுக்கானக் கட்டணங்களும் கடுமையாக உயர்ந்ததன் காரணமாக சிங்கப்பூரில் ஆகஸ்ட் மாத பணவீக்க விகிதம் 14 ஆண்டு காணாத ஏற்றத்தை நெருங்கியது.
புவிசார் அரசியல் பதற்றங்கள், உலகளாவிய பொருள் விலையேற்றம், விநியோகத் தொடர் இடையூறுகள், கணிக்கமுடியாக பருவநிலை போன்றவை உலகத்தை இன்னும் நிச்சயமற்ற நிலைக்குத் தள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பணவீக்க உயர்வைச் சமாளிக்க சிங்கப்பூர் முயற்சிகளை மேற்கொண்டபோதிலும் சவால்கள் நெருங்கிவருவதை ஆகஸ்ட் மாதத் தரவுகள் உணர்த்தின.
சிங்கப்பூர் குடும்பங்களின் செலவுகளைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் மூலாதாரப் பணவீக்கம் ஆண்டுக்காண்டு அடிப்
படையில் 5.1 விழுக்காட்டைத் தொட்டது.
தனியார் போக்குவரத்து மற்றும் தங்குமிடச் செலவுகள் இந்த மூலாதாரப் பணவீக்கக் கணக்கீட்டில் சேராது.
ஜூலை மாதம் 4.8 விழுக்காடே அதிகமாக இருந்த நிலையில் ஆகஸ்ட் மாத நிலவரம் அதனையும் தாண்டிவிட்டது.
மேலும் 2008 நவம்பருக்குப் பின்னர் இது ஆக அதிகமான மூலாதாரப் பணவீக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த மாதத்தில் இதன் விகிதம் 5.5 விழுக்காடாக இருந்ததே ஆக உச்சம்.
ஆகஸ்ட் மாதத்தில், பயனீட்டாளர் விலைக் குறியீடு எனப்படும் ஒட்டுமொத்த பணவீக்கம் 14 ஆண்டுகளுக்கு முன், அதாவது 2008 ஜூன் மாதம் பதிவான அதே 7.5 விழுக்காட்டுக்கு அதிகரித்தது. ஜூலை மாதம் இது 7 விழுக்காடாக இருந்தது.
ஆகஸ்ட் மாத பணவீக்கம் அதனையும் தாண்டி 14 ஆண்டு உச்சத்தைச் சமப்படுத்தியது.
உயர்ந்துவிட்ட போக்குவரத்து பணவீக்கம், அதிகரித்த விடு
முறைக்காலச் செலவுகள், வீடமைப்பு வாடகையில் கடும் ஏற்றம், உணவு விலை மற்றும் சேவைக் கட்டணங்களின் உயர்வு ஆகியன ஒட்டுமொத்தப் பணவீக்கத்தை அதிகரித்துவிட்டன.
இவ்வாண்டின் ஆகஸ்ட் மாத உணவு விலைகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் 6.4 விழுக்காடு அதிகரித்துள்ளன.
இதன் தாக்கம் பயனீட்டாளர்களைப் பாதித்ததாக சிஐஎம்பி பொருளியல் நிபுணர் சோங் செங் உன் தெரிவித்துள்ளார்.
மேலும், பொதுமக்களில் குறிப்பிட்ட சில பகுதியினர் இன்னும் வாடகை வீடுகளில் தங்கும் நிலையில் வாடகைகள் உயர்த்தப்பட்டது 'வேடிக்கை'யாக உள்ளதென 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தித்தாளிடம் அவர் கூறினார்.
குறிப்பாக, கொண்டோமினிய வீடுகளுக்கான வாடகை கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதம் 27.5 விழுக்காடு அதிகரித்தது. அதேபோல வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளுக்கான வாடகையும் 21.6 விழுக்காடு ஏற்றம் கண்டது.
இந்த ஆண்டின் எஞ்சிய காலப் பகுதியையும் சேர்த்து ஆண்டு முழுமைக்குமான ஒட்டுமொத்த பணவீக்கம் 5 விழுக்காட்டுக்கும் 6 விழுக்காட்டுக்கும் இடையில் தொடர்ந்து நீடிக்கும் என முன்னுரைக்கப்பட்டு உள்ளதாக சிங்கப்பூர் நாணய ஆணையம் தெரிவித்துள்ளது.
அதேபோல மூலாதாரப் பணவீக்கம் 3 விழுக்காட்டுக்கும் 4 விழுக்காட்டுக்கும் இடைப்பட்டு இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளதாக ஆணையம் நேற்று கூறியது. அத்துடன், இந்த மூலா தார பணவீக்க அதிகரிப்பு அடுத்து வரும் சில மாதங்களுக்கு நீடிக்கக் கூடும் என்றும் கணிக்கப்பட்டு உள்ளது.
இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களுக்கான ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 5.7 விழுக் காடாக இருந்தது.