தாம் இயக்கி, நடித்துள்ள 'ராக்கெட்ரி' திரைப்படம் ஆஸ்கார் விருதுப் போட்டியில் பங்கேற்பதற்கு தகுதியுள்ள படம் என நடிகர் மாதவன் கூறியுள்ளார். மேலும், 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்துக்கும் ஆஸ்கார் விருது பெறு வதற்கான தகுதி உள்ளது என அவர் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
"ஆஸ்கார் விருதுப் போட்டிக்கு இந்தியா சார்பில் தேர்வான 'செல்லோ ஷோ' குஜராத்தி படக்குழுவினரை வாழ்த்துகிறேன். அவர்கள் ஆஸ்கார் விருதை வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்ப்பார்கள் என நம்புகிறேன். இது திரைப்படத் துறையில் நாம் சிறப்பாகச் செயல்பட வேண்டிய காலகட்டம்," என்கிறார் மாதவன்.
'வெந்து தணிந்தது காடு' படத்தின் வெற்றியை அடுத்து, அப்படத்தின் நாயகன் சிம்புவுக்கு சொகுசு காரும் இயக்குநர் கௌதம் மேனனுக்கு இருசக்கர வாகனமும் பரிசளித்துள்ளார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ். அப்படத்தின் இரண்டாம் பாகத்துக்காக மூவரும் மீண்டும் கூட்டணி அமைக்க உள்ளனர். அதற்கான பணிகளைத் தொடங்கிவிட்டதாக கௌதம் மேனன் கூறியுள்ளார். இதற்கிடையே, விக்னேஷ் சிவன் இயக்கும் அஜித் படத்தில் கௌதம் மேனன் வில்லனாக நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன்பு அஜித்தை வைத்து கௌதம் மேனன் இயக்கிய 'என்னை அறிந்தால்' படத்தில் வரும் 'அதாரு... அதாரு...' என்ற பாடலை விக்னேஷ் சிவன் எழுதியிருந்தார். இப்போது விக்னேஷ் சிவன் அஜித்தை வைத்து இயக்கும் புதிய படத்தில் கௌதம் வில்லனாக நடிக்க உள்ளார்.