சிங்கப்பூரில் கடந்த சில நாட்களாக கொவிட்-19 தொற்றுச்சம்பவங்கள் தொடர்ந்து அதிகரிக்கிறது.
ஏறக்குறைய 35 முதல் 40 விழுக்காடு வரை தொற்று அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது.
கொவிட்-19 தொற்றுடன் வாழும் சூழலை நாடு கடைப்பிடித்து வரும் வேளையில் அமைச்சின் எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
தொற்றுச் சம்பவங்கள் அதிகரிப்பதற்கு உருமாறிய ஒமிக்ரான் பிஏ.2.75 கிருமியே முக்கிய காரணம். மொத்த தொற்றுச் சம்பவங்களில் இதன் பாதிப்பு மட்டும் கால் விழுக்காடாகும். இதன்படி பார்த்தால் நாளுக்கு நாள் 900 முதல் 1,000 சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
அடுத்த சில வாரங்களிலும் தொற்றுச் சம்பவங்கள் அதிகரிப்பதை எதிர்பார்க்கலாம் என்று கூறிய அமைச்சு, நிலைமையைக் கண்காணித்து வருவதாகத் தெரிவித்தது.
அதே சமயத்தில் கூடுதல் தடுப்பூசி போடாதவர்கள் உடனே போட்டுக்கொள்ளும்படி அது வலியுறுத்தியது.
"தொற்று அதிகரித்தாலும் யாரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டதற்கான அறிகுறியில்லை. அன்றாடத் தொற்று அதிகரிப்பதால் சுகாதாரப் பராமரிப்பு கட்டமைப்புக்கு நெருக்கடி ஏற்படவில்லை," என்று அது கூறியது.
உள்ளூர் தொற்றுச் சம்பவங்களில் இரு மாற்றங்களைச் கூர்ந்து கவனிக்க வேண்டும் என்றது அமைச்சு.
தொற்று ஏற்பட்டவர்களே மீண்டும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். செப்டம்பர் மாதம் தொடக்கத்தில் மொத்த தொற்றுச் சம்பவங்களில் ஆறு விழுக்காடாக இருந்த இது, இவ்வாரம் பத்து விழுக்காட்டுக்கு அதிகரித்துள்ளது. இந்த உயர்வு சிறியதாக இருந்தாலும் கவனத்தில் கொள்வது அவசியம். இது முதல் மாற்றம்.
ஒமிக்ரான் பிஏ.2.75 ரக கிருமியால் தொற்று அதிகரித்திருப்பது இரண்டாவது மாற்றமாகும்.
கொவிட்-19 விதிமுறைகள் தளர்த்தப்பட்டு சமூக, ஒன்றுகூடல் அதிகரித்துள்ளதால் மக்களிடையே இந்த வகை பரவி வருகிறது.
இந்த நிலையில் பொதுமக்கள் தனிப்பட்ட, சமூகப் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று அமைச்சு கேட்டுக் கொண்டது.
நெரிசலான இடங்களிலும் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களைச் சந்திக்கும்போதும் முகக்கவசம் அணியலாம். உடல்நலமில்லாதவர்கள் தொடர்ந்து வீட்டில் தங்க வேண்டும். வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். வெளியிடத்தில் அல்லது அலுவலகத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டால் உடனடியாக வீட்டுக்குச் சென்று ஓய்வெடுக்க வேண்டும் அல்லது மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும் என்று அமைச்சு சொன்னது.