சிங்கப்பூரில் மோதவுள்ள பொருசியா டோர்ட்மண்ட், லயன் சிட்டி செய்லர்ஸ்
ஜெர்மனியின் பிரபல காற்பந்துக் குழுவான பொருசியா டோர்ட்மண்ட், சிங்கப்பூரின் லயன் சிட்டி செய்லர்சை (படம்) வரும் நவம்பர் மாதம் 24ஆம் தேதியன்று சந்திக்கவுள்ளது. இந்த நட்புமுறை ஆட்டம் ஜாலான் புசார் விளையாட்டரங்கில் நடைபெறும்.
செய்லர்சின் பயிற்சி நிலையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இது குறித்து இரு குழுக்களும் அறிவித்தன.
ஆட்டத்தை முன்னிட்டு ஹோட்டலில் விளையாட்டாளர்களை நேரில் சந்திப்பது போன்ற ரசிகர்கள் விரும்பும் நடவடிக்கைகள் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
முதன்முறையாக இந்தியாவில் மோட்டார்சைக்கிள் கிராண்ட் பிரி
புதுடெல்லி: இந்தியாவில் முதன்முறையாக 'மோட்டோ ஜிபி' எனும் மோட்டார்சைக்கிள்களுக்கான கிராண்ட் பிரி பந்தயம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. ஒரு காலத்தில் ஃபார்முலா ஒன் பந்தயம் நடைபெற்ற திடலில் மோட்டார்சைக்கிள் கிராண்ட் பிரி நடைபெறவுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள புத் அனைத்துலகப் பந்தயத் திடலில் இந்நிகழ்வு இடம்பெறும் என்று ஏற்பாட்டாளர்கள் நேற்று தெரிவித்தனர். 2011ஆம் ஆண்டுக்கும் 2013ஆம் ஆண்டுக்கும் இடையே அங்கு மூன்று ஃபார்முலா ஒன் பந்தயங்கள் இடம்பெற்றன.
உலகக் கிண்ணப் போட்டியிலிருந்து ஈரானை நீக்குமாறு குரல்
தோஹா: அடுத்த மாதம் கத்தாரில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியிலிருந்து ஈரானை நீக்குமாறு பெண்கள் உரிமைக் குழு ஒன்று அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனத்திடம் கேட்டுக்கொண்டுள்ளது. ஈரான் பெண்களைச் சரியாக நடத்துவதில்லை என்று அக்குழு சொல்கிறது.
அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனத்தின் நெருக்குதலையும் மீறி ஈரானில் காற்பந்து ஆட்டங்களைக் காண விளையாட்டரங்குகளுக்குள் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்று குழு கூறியுள்ளது. சம்மேளனத்திற்கு அது அனுப்பிய கடிதத்தில் இந்த விவரம் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது குறித்து அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனம், ஈரானின் காற்பந்துச் சங்கம் இரண்டும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கருத்து தெரிவிக்கவில்லை.