அனுஷா செல்வமணி
லிட்டில் இந்தியா வட்டாரத்துக்கு நேற்று சென்றிருந்த பலர் புராணக் கதாபாத்திரங்களான ராதை, கிருஷ்ணன், நரகாசுரன் ஆகியோரைப்போல வேடமணிந்தோருடன் படம் எடுத்துக்கொண்டார்கள்.
கிளைவ் ஸ்திரீட்டில் இருக்கும் 'பொலி' திறந்தவெளியில், குடும்பங்கள் ஈடுபடக்கூடிய வகையில் விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தீபாவளிக் கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்த ஆண்டு புத்தாக்க முறையிலான நிகழ்ச்சிகளுக்கு லிஷா எனப்படும் இந்திய வர்த்தகர்கள் மரபுடைமைச் சங்கம் நேற்று ஏற்பாடு செய்திருந்தது.
புராணக் கதாபாத்திரங்களைப் போல் ஆடையணிந்த மூவர், கேம்பெல் லேனிலும், சிராங்கூன் சாலையிலும் நேற்றுப் பிற்பகல் ஒரு மணி முதல் இரவு எட்டு மணி வரை வருகையாளர்களை மகிழ்விக்க வலம்வந்தனர்.
பொதுமக்கள் பலரும் இவர்களோடு சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆர்வத்துடன் திரளாகச் சூழ்ந்துகொண்டார்கள்.
நேற்று பிற்பகலில் பொழிந்த கனத்த மழையையும் பொருட்படுத்தாமல், 'பொலி' திறந்தவெளியில் அமைக்கப்பட்ட கூடாரத்தில் பலர் குடும்பத்தோடு விளையாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
காலை பத்து மணிக்குத் தொடங்கிய விளையாட்டுகளோடு ஆடல், பாடல் எனப் பல கலை நிகழ்ச்சிகளும் நடந்தேறின.
"என் சகோதரியின் மகளுடன் இந்த விளையாட்டுகளில் கலந்துகொண்டது மிகவும் உற்சாகமாக இருந்தது. இதுபோன்ற குடும்ப விளையாட்டுகள் எங்களுக்கு இடையிலான பிணைப்பை மேம்படுத்தியுள்ளது. கலைநிகழ்ச்சி படைத்தவர் மிகவும் நகைச்சுவையாகப் பேசியது எங்களைச் சிரிப்பில் ஆழ்த்தியது," என்றார் 24 வயதாகும் செல்வி ஈஸ்வரி.
"கொவிட்-19 நோய்த்தொற்று காரணமாக கடந்த ஈராண்டுகளாக தீபாவளியை வீட்டிற்குள்ளேயே கொண்டாடினோம். இவ்வாண்டு திறந்தவெளியில் இத்தகைய நிகழ்ச்சி நடைபெறுவதை அறிந்து, நானும் என் பிள்ளைகளும் காலைநேரத்திலேயே 'பொலி' திறந்தவெளிக்கு வந்துவிட்டோம்.
"சமூக உணர்வோடு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்த நிகழ்ச்சி எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது," என்று கூறினார் 34 வயதாகும் திருமதி லட்சுமி முருகப்பன்.