தற்போதைய நிலவரத்திற்கு ஏற்ப கொவிட்-19 தடுப்பூசிக்கான புதிய உத்திக்கு சிங்கப்பூர் உருமாறுவதாக கடந்த வெள்ளிக்கிழமை சுகாதார அமைச்சு அறிவித்தது. அதன் அடிப்படையில் 500க்கும் அதிகமானோர் ஒன்றுகூடும் நிகழ்வுகளுக்கு தடுப்பூசி அடிப்படையில் பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை நேற்று முன்தினம் (அக்டோபர் 10) முதல் தளர்த்தப்பட்டுவிட்டது.
இந்நிலையில், இரண்டாவது பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்வது தொடர்பாக பொதுமக்களுக்கு இருக்கும் சந்தேகங்களுக்கு 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தித்தாள் பதிலளிக்கிறது.
இப்போதைக்கு எத்தனை கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற கேள்விக்குப் பதிலளிக்கையில், "அடிப்
படையான இரண்டு தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்ட பிறகு குறைந்தபட்சம் ஐந்து மாதங்களிலிருந்து பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்," என பதிலளிக்கப்பட்டு உள்ளது.
"எத்தனை தடுப்பூசி என்பதைக்காட்டிலும் சூழலுக்கேற்ப தடுப்பூசி என்பது புதிய அணுகுமுறையின் ஒரு பகுதி.
"சளிக்காய்ச்சலுக்கான தடுப்பூசி எவ்வாறு பருவத்திற்கேற்ப போடப்படுகிறதோ அதைப்போல இதுவும் அமையும்," என்று கடந்த வெள்ளிக்கிழமை சுகாதார அமைச்சு தெரிவித்திருந்தது.
புதிய உத்தியின்கீழ், அடிப்
படைப் பாதுகாப்புக்காக மூன்று தடுப்பூசிகளைப் போட்டிருப்பது அவசியம்.
இரண்டாவது பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்வர்கள் உள்ளிட்ட 50 வயதும் அதற்கு மேற்பட்ட வயதும் உடையவர்கள் ஆகக் கடைசி தடுப்பூசி போட்டுக்கொண்ட ஐந்து மாதங்களில் இருந்து ஓராண்டுக்குள் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
கேள்வி: அடிப்படைப் பாதுகாப்புக்காக இரண்டு தடுப்பூசிகளையும் பூஸ்டர் தடுப்பூசியும் போட்டுக்கொண்ட பின்னரும் கூடுதல் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமா?
பதில்: 'எம்ஆர்என்ஏ' பூஸ்டர் தடுப்பூசிகளின் ஆற்றல் நான்கு மாதங்களில் குறைந்துவிடுவதாக அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நிலையத்தின் ஆய்வு தெரிவிக்கிறது.
எனவே கூடுதல் பூஸ்டர் தடுப்பூசிக்குப் பரிந்துரைக்கப்படுகிறது. குளிர்காலத்தில் புதிய வகை கொரோனா கிருமி எதிர்பார்க்கப்
படுவதால், தகுதி உள்ளவர்கள் தங்களுக்கான தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்திருந்தார்.
கூடுதல் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு 50 வயதும் அதற்கு மேற்பட்ட வயதும் உடையவர்கள் கேட்டுக்கொள்ளப்படும் அதேவேளை இதர வயதுப் பிரிவினருக்கும் இந்தப் பரிந்துரையை நீட்டிக்கலாமா என்பது குறித்து பின்னர் பரிசீலிக்கப்படும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.