'நீண்டகாலம் தங்க அனுமதி அட்டை, மாணவர் அனுமதி அட்டை உடையோர் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி பெறவேண்டும்'

'நீண்டகாலம் தங்க அனுமதி அட்டை, மாணவர் அனுமதி அட்டை உடையோர் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி பெறவேண்டும்'

3 mins read
9cf1c627-6c02-4052-9302-9a504d13112d
சிங்கப்பூருக்கு நுழைய அனுமதி பெறுபவர்களுக்கு குடிநுழைவுச் சோதனைச் சாவடி ஆணையம் அல்லது கல்வி அமைச்சிடமிருந்து ஒப்புதல் கடிதம் ஒன்று வழங்கப்படும் என்று அரசாங்கம் நேற்று அறிவித்தது. அந்தக் கடிதம் இரு வாரங்களுக்குச் செல்லுபடியாகும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

நீண்டகால வருகை அட்டை வைத்திருப்பவர்களும் மாணவர் அனுமதி அட்டை வைத்திருப்பவர்களும் சிங்கப்பூருக்குள் நுழைவதற்கு முன்பு அரசாங்கத்திடமிருந்து அனுமதி பெற வேண்டும்.

சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் இன்று (மார்ச் 28) அறிவித்த இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை நாளை இரவு 11.59 மணி முதல் நடப்புக்கு வருகிறது.

நீண்டகால வருகை அட்டை வைத்திருப்பவர்களும் நீண்டகால வருகை அட்டை பெற கொள்கை அளவில் ஒப்புதல் பெற்றவர்களும் சிங்கப்பூருக்கு வருவதற்கு முன்பாக குடிநுழைவுச் சோதனைச் சாவடி ஆணையத்திடமிருந்து முதலில் அனுமதி பெற வேண்டும். அதற்கான விண்ணப்பத்தை மின்னஞ்சல் மூலம் ஆணையத்திடம் சமர்ப்பிக்கலாம்.

ஏற்கெனவே மாணவர் அனுமதி அட்டை வைத்திருப்பவர்களும் மாணவர் அனுமதி அட்டை பெற கொள்கை அளவில் ஒப்புதல் பெற்றவர்களும் சிங்கப்பூருக்கு வருவதற்கு முன்பு கல்வி அமைச்சிடமிருந்து அனுமதி பெற வேண்டும்.

அனுமதி கோரும் மாணவர் எந்தப் பாடத்தில் சேர்ந்துள்ளார் என்பது கருத்தில் கொள்ளப்படும் என்று கூறிய அமைச்சு, அரசாங்கம் ஆதரவு பெற்ற உயர் கல்விக் கழகங்களில் பயில்பவர்களுக்கு சிங்கப்பூருக்குள் நுழைய முன்னுரிமை வழங்கப்படும் என்று சொன்னது.

மாணவர் அனுமதி அட்டை வைத்திருப்பவர்களும் மாணவர் அனுமதி அட்டை பெற கொள்கை அளவில் ஒப்புதல் பெற்றவர்களும் தாங்கள் பயிலும் கல்விக் கழகத்திடம் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் கல்வி அமைச்சிடம் கல்விக் கழகம் விண்ணப்பத்தை வழங்கும்.

சிங்கப்பூருக்கு நுழைய அனுமதி பெறுபவர்களுக்கு குடிநுழைவுச் சோதனைச் சாவடி ஆணையம் அல்லது கல்வி அமைச்சிடமிருந்து ஒப்புதல் கடிதம் ஒன்று வழங்கப்படும் என்று அரசாங்கம் நேற்று அறிவித்தது. அந்தக் கடிதம் இரு வாரங்களுக்குச் செல்லுபடியாகும்.

தாங்கள் புறப்படும் நாட்டின் விமான நிலையத்தில் விமானச் சேவை நிறுவன ஊழியர்களிடமும் சிங்கப்பூர் வந்து இறங்கியவுடன் சாங்கி விமான நிலையத்தில் குடிநுழைவு அதிகாரியிடமும் இந்தக் கடிதத்தைக் காட்ட வேண்டும்.

குடிநுழைவுச் சோதனைச் சாவடி ஆணையம் அல்லது கல்வி அமைச்சிடமிருந்து அனுமதி கிடைக்கும் வரை சிங்கப்பூர் வர பயண ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

அனுமதி பெறாமல் சிங்கப்பூர் வருபவர்கள், சாங்கி விமான நிலையத்தில் குடிநுழைவு நடைமுறைகளைக் கடக்க முடியாது. அவர்களது சொந்த செலவில் 48 மணி நேரத்திற்குள் சிங்கப்பூரைவிட்டு வெளியேற வேண்டும் என்று குடிநுழைவுச் சோதனைச் சாவடி ஆணையம் கூறியது.

சிங்கப்பூரைவிட்டு வெளியேறுவதற்கான உத்தரவுக்கு இணங்க மறுப்பவர்களின் வருகை அட்டை அல்லது கொள்கை அளவில் வழங்கப்பட்ட ஒப்புதல் ரத்து செய்யப்படும் என்று ஆணையம் எச்சரித்தது.

இந்நிலையில், வேலை அனுமதி அட்டை அல்லது சார்ந்திருப்போர் அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள், சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொள்வதற்கு முன்பாக மனிதவள அமைச்சிடமிருந்து அனுமதி பெற வேண்டும்.

ஏற்கெனவே வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்களும் வேலை அனுமதி அட்டை பெற கொள்கை அளவில் ஒப்புதல் பெற்றவர்களும் சிங்கப்பூருக்குள் நுழைய இந்தப் புதிய ஏற்பாடு பொருந்தும்.

அவர்களது சார்பில் முதலாளிகள் இணையம் மூலம் மனிதவள அமைச்சிடம் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.

அமைச்சிடமிருந்து முறையாக அனுமதி பெறாமல் சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொள்பவர்களின் வேலை அனுமதி அட்டை ரத்து செய்யப்படும் என்று அரசாங்கம் கூறியது. அவர்களால் சிங்கப்பூரில் இனி வேலை செய்ய முடியாது.

சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக மேற்கூறப்பட்ட ஏற்பாடு நடைமுறைப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூருக்கு வர அனுமதி வழங்கப்படுபவர்களுக்கு இங்கு வந்தவுடன் 14 நாட்களுக்கு வீட்டில் இருப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படும்.

சிங்கப்பூருக்கு வருவதற்கு முன்பாக SG Arrival Card e-Service வழி சுகாதார, பயண உறுதிமொழியைச் சமர்ப்பிக்க வேண்டும் என பயணிகளுக்கு நினைவூட்டப்படுகிறது.

#சிங்கப்பூர் #வெளிநாட்டு ஊழியர் #வெளிநாட்டு மாணவர் #அனுமதி

குறிப்புச் சொற்கள்