மரண தண்டனை வழக்குகளைக் கையாளும் வழக்கறிஞர்கள் உளவியல் பரிசோதனைக்குச் செல்வது கட்டாயமாகி உள்ளது.
அரசாங்கத் தலைமைச் சட்ட அலுவலகம் தனது அதிகாரிகளின் மனநலத்திற்காக புதிய திட்டம் ஒன்றை அமைத்துள்ளது.
சட்ட ஆண்டின் துவக்கத்தைக் குறிக்க ஜனவரி 8ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றியபோது திட்டத்தைப் பற்றிப் பேசினார் தலைமைச் சட்ட அதிகாரி லூசியன் வோங்.
வேலைகளின்போது மனதைப் பெரிய அளவில் பாதிக்கக்கூடிய சம்பவங்களை எதிர்கொள்ளும் வழக்கறிஞர்களுக்கு உதவ, அரசாங்கத் தலைமைச் சட்ட அலுவலக அதிகாரிகள் சிலர் துணை ஆலோசகர்களாகப் பயிற்சி பெற்றுள்ளதாக அவர் கூறினார்.
பலசேவை இணையவாசல் ஒன்றிலும், ஆதரவுக் கட்டமைப்புகள், நலம் சார்ந்த காணொளிகள், ஓய்வெடுக்கும் வழிமுறைகள் போன்றவை வழங்கப்படுகின்றன.
அதோடு தங்கள் குழுக்களில் மனநலப் பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவற்றைச் சமாளிக்க மேற்பார்வையாளர்களுக்கு உதவும் நோக்கில் பயிலரங்குகள் ஏற்பாடு செய்யப்படுவது வழக்கம்.
சில திட்டங்கள் அரசாங்கத் தலைமைச் சட்ட அலுவலகத்தின் குற்றப் பிரிவில் உள்ள வழக்கறிஞர்களை இலக்காகக் கொண்டு வகுக்கப்பட்டதைத் திரு வோங் சுட்டினார்.
குற்றம்சாட்டப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் சமூக விவகாரங்கள், மனநலப் பிரச்சினைகள், பாதிக்கப்பட்டவர்களின் துயரங்கள் ஆகியவற்றை ஆக அதிகமாக அந்த வழக்கறிஞர்கள் எதிர்நோக்குகிறார்கள் என்பதே அதற்குக் காரணம்.
இந்த அதிகாரிகள் குற்ற வழக்குகளுக்காக மனதைப் பெரிய அளவில் பாதிக்கக்கூடிய பொருள்களைச் சோதனையிடவேண்டிவரும். அல்லது பாதிக்கப்பட்டவரையோ, குற்றவாளியையோ துயரமான விவரங்களை வெளிப்படுத்தச் செய்யவேண்டும் என்றார் திரு வோங்.