தைப்பூச ஊர்வலத்தில் மழை வெயில் பாராமல் வழிபாட்டிற்கு வரிசையில் காத்திருந்த மக்களுக்கும் பால்குடம், காவடி எடுத்தவர்களுக்கும் உதவும் நோக்கில் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் சிலரும் தனிநபர்களும் இணைந்து கிட்டத்தட்ட 25,000 பேருக்கு அன்னதானம் வழங்கினர்.
இவ்வளவு பெரிய ஏற்பாட்டை எப்படி செய்ய முடிந்தது என்பதை அறிய தமிழ்முரசு ஏற்பாட்டு குழுவிடம் பேசியது.
இரண்டு மாதங்களுக்கு முன்னரே அன்னதானம் குறித்து திட்டம்தீட்டியதாக ஏற்பாட்டுக்குழு தலைவர் டேவிட் செல்வராஜூ கூறினார்.
ராஜாஸ் கேட்டரிங், கேசுரினா கறி, ஜோதி ஸ்டோர் புஷ்பக்கடை, சென்னை டிரேடிங் போன்ற லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், லிஷா எனப்படும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமை சங்கம், தனிநபர்கள் சிலர் இணைந்து ஏறத்தாழ 30,000 வெள்ளி நன்கொடை திரட்டப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இந்த ஆண்டு காலை 7 மணி முதலே லிட்டில் இந்தியா ஆர்கேட் அருகே அமைக்கப்பட்ட நிலையத்தில் தங்களது அன்னதான நடவடிக்கைகளைத் தொடங்கியதாக செல்வராஜூ கூறினார்.
மழையால் எந்த பாதிப்பும் இல்லை என்றும் மாலை 6.30 மணியளவில் அன்னதானம் முடிந்ததாக அவர் கூறினார்.
"உணவு கிட்டத்தட்ட 18,000 பேருக்கு தான் செய்திருந்தோம், ஆனால் மதிய நேரத்தில் 1,500 ஆப்பிள் பழங்கள் நன்கொடையாக வந்தது. சிலர் காய்கறி பிரியாணி போன்றவற்றை செய்து நிலையத்தில் வழங்கியதால் இன்னும் கூடுதலானோருக்கு உணவு கொடுக்க முடிந்தது.
புளி சாதம், கேசரி, காய்கறி பிரியாணி, பொங்கல் போன்றவற்றை மக்களுக்கு வழங்கினோம்" என்றார் ஏற்பாட்டுக் குழுவில் இருந்த லிஷாவின் கெளரவ செயலாளர் ருத்தரபதி பார்த்தசாரதி.
சிங்கப்பூரர்கள், வெளிநாட்டு ஊழியர்கள், சுற்றுலாப் பயணிகள் என பலதரப்பட்ட மக்களுக்கு அன்னதானம் வழங்கியது பெரும் மனநிறைவு தருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரில் ஈராண்டுகளுக்குப் பிறகு பிப்ரவரி 5ஆம் தேதி தைப்பூச ஊர்வலம் கோலாகலமாக நடந்து முடிந்தது.
ஆயிரகணக்கான பக்தர்கள் ஸ்ரீ தெண்டாயுதபாணி ஆலயத்தில் வழிபட்டனர்.
28 ஆண்டுகளாகத் தொடரும் சேவை:
தாம் 28 ஆண்டுகளாக தைப்பூசத்தில் அன்னதான நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதாக ஏற்பாட்டுக்குழுத் தலைவர் டேவிட் செல்வராஜூ கூறினார்.
முதலில் தனிநபராக லிட்டில் இந்திய ஆர்கேட் முன்பு தண்ணீர் போத்தல்கள் வழங்கினேன், பிறகு சில வியாபாரிகளுடன் இணைந்து அதை அன்னதான திட்டமாக மாற்றியதாக திரு செல்வராஜூ தெரிவித்தார்.
கொஞ்சம் கொஞ்சமாக நன்கொடைகள் பெருகியதால் கடந்த 10 ஆண்டுகளாகப் பக்தர்களுக்கு உணவு வழங்கிவருவதாக அவர் குறிப்பிட்டார்.
வரும் ஆண்டுகளில் இன்னும் சிறப்பாகவும் பெரிய அளவில் செய்ய விருப்பம் உள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.