சிங்கப்பூரில் அண்மை வாரங்களில் கொவிட்-19 கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்ட 18 விழுக்காட்டினருக்கு புதிய ‘இஜி.5 ஓமிக்ரான்’ வகை கிருமித் திரிபால் பாதிப்பு ஏற்பட்டதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
கிருமித்தொற்றுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்போரின் எண்ணிக்கையும் நிலையாக இருப்பதாக செவ்வாய்க்கிழமை அது குறிப்பிட்டது.
இங்கு முதல் ‘இஜி.5 ஓமிக்ரான்’ வகை கிருமித் திரிபு பாதிப்பு மே 5ஆம் தேதி அடையாளம் காணப்பட்டது.
புதிய கிருமித் திரிபால் கிருமிப் பரவல் அதிகரித்ததாகவோ நோயின் தீவிரம் அல்லது மரணமடைந்தோர் எண்ணிக்கை கூடியதாகவோ உலகச் சுகாதார நிறுவனம் தகவல் வெளியிடவில்லை என்பதை அமைச்சு சுட்டியது.
ஏறக்குறைய 51 நாடுகளில் ‘இஜி.5 ஓமிக்ரான்’ வகை கிருமித் திரிபு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், சிங்கப்பூரில் கிருமிப்பரவல் நிலைமையை அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகச் சுகாதார அமைச்சு கூறியது.