கொவிட்-19 சூழ்நிலை பரமபதம் விளையாட்டைப் போன்றது: அமைச்சர்
சிங்கப்பூரின் இப்போதைய கொவிட்-19 சூழ்நிலை, பரமபதம் விளையாட்டைப் போன்று இருப்பதாக சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.
ஏணி அதிர்ஷ்டமும் பாம்பு பாதகமும் உள்ள அந்த விளையாட்டில் தாயத்தில் அடுத்தது என்ன விழும் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது என்று இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
புதிதாக தலைதூக்கியுள்ள ‘ஓமிக்ரான்’ கிருமி வேகமாகப் பரவக்கூடியதாக, ஆபத்தானதாக, தடுப்பூசிகளை வீழ்த்திவிடும் நிலையில் இருக்கும் பட்சத்தில் பரமபத விளையாட்டில் சிங்கப்பூர் பாம்பு வாயில் சிக்கிவிடும்.
கீழே இறங்கிவிடுவோம்.
பாதாளத்துக்கு அது நம்மை இறக்கிவிடும் என்று அமைச்சர் கூறினார். ஆனால் புதிய ஓமிக்ரானுக்குத் தொற்றும் தன்மை இருந்தாலும் அதனால் இலேசான பாதிப்புதான் ஏற்படும் என்றால் அது டெல்டாவைவிட அதிக ஆதிக்கமிக்கதாக ஆகக்கூடும்.
இது, கொவிட்-19 கிருமியுடன் வாழ்வதை நோக்கி நாடு நகர வழியை ஏற்படுத்தும் என்று திரு ஓங் கூறினார்.
இத்தகைய நிலையில், சிங்கப்பூர் விவேகமான அணுகுமுறையைக் கையாண்டு, ஏற்புடைய நடவடிக்கைகளை அமலாக்கி சமூகத்தில் புதிய கிருமி நிலைபெறுவதைத் தடுக்கவேண்டும் என்று ர அமைச்சர் ஓங் குறிப்பிட்டார்.