நூல் வாசிக்கும் பழக்கத்தை மிகச் சுவாரஸ்யமான முறையில் சிறுவர்களிடம் ஊக்குவிக்கும் அம்சங்கள், உடற்குறை உள்ளோருக்கான வசதிகளுடன் அடங்கிய பொங்கோல் வட்டார நூலகம் நேற்று திறக்கப்பட்டது.
‘ஒன் பொங்கோல்’ நிலையத்தில் உள்ள இந்த நூலகத்தின் முதல் இரண்டு மாடிகள் சிறுவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ளன. தற்போது இந்த இரு மாடிகள் மட்டுமே பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டுள்ளன. மற்ற மூன்று மாடிகள் சில மாதங்களில் திறக்கப்படும்.
சிறுவர்களுக்கான பல கேளிக்கைப் பகுதிகளும் ‘ஸ்டோரீஸ் கம் அலைவ்’ என்ற கதைகள் உருவாகும் அறையும் நூலகத்தில் உள்ளது. அந்த அறையில் தொடுதிரைகளும் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த இரு மாடிகளில் எல்லா வயதுச் சிறுவர்களும் பயன்க்பெறக்கூடிய கதைசொல்லி பகுதி, உலகமும் நாமும் எனும் தொகுப்பு, சிறுவர்கள் நடவடிக்கைப் பகுதி போன்றவை உள்ளன.
அமெரிக்காவின் ஸ்மித்சோனியன் அரும்பொருளகத்துடன் கூட்டு முயற்சியாக ‘ஸ்பார்க்! லேப்’ என்ற பகுதி நூலகத்தின் இரண்டாம் மாடியில் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்விடத்தில் ஏழு வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் தாங்களே நேரடியாக நடவடிக்கைகளில் ஈடுபட்டு, படைப்புகளை உருவாக்கி சவால்களை மேற்கொள்ளலாம். இதில், உலகநாடுகளை மையமாகக்கொண்ட, வெளிநாட்டுத் தூதரகங்கள் வழங்கிய நூல்கள் அடுக்கிவைக்கப்பட்டுள்ளன.
“சிறுவர்களின் கற்பனைத் திறனை வளர்க்க, மற்ற நூலகங்களில் இல்லாத இந்த வசதி உதவுகிறது. இந்த நூலகமும் வசதிகளும் வடகிழக்குக் குடியிருப்பாளர்களுக்கு பெரும் பயனைத் தரும்,” என்றார் சிங்கா அகடமி துணைப்பாட நிலையத்தில் ஆசிரியராகப் பணிபுரியும் ஹேமலதா ரமேஷ், 46.
கடந்த சில ஆண்டுகளாக நூலகங்களில் தொண்டூழியராக இருக்கும் இவர், தமது இரு பிள்ளைகளுடன் பொங்கோல் நூலகத்தில் தொண்டுழியம் புரிய விருப்பம் தெரிவித்தார்.
“இந்த நூலகத்திற்கு வரும் உடற்குறையுள்ளவர்களுக்கு உதவ, தொண்டூழியர்களுக்கு சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. கண் பார்வை இல்லாதவர் களுக்கு எப்படி கதை சொல்வது, நடவடிக்கைகள் உருவாக்குவது போன்றவற்றைக் கற்றுக்கொண்டேன்,” என்றார் ஹேமலதாவின் மகளான 16 வயது ரசிகா ரமேஷ்.
உடற்குறை உள்ளோரும் நூல்களை எளிதில் இரவல் பெறுவதற்கான வசதிகளும் தொழில்நுட்பமும் பொங்கோல் நூலகத்தில் உள்ளன.
சக்கர நாற்காலி பயன்படுத்துவோரும் பார்வை குறைபாடு உள்ளோரும் எளிதில் பயன்படுத்தக்கூடிய நூல் இரவல் நிலையங்கள் அந்த வசதிகளில் ஒன்று.
நூல்களை மேசைகளில் வைக்காமல் அவற்றை இரவல் வாங்க உதவும் ஆர்எஃப்ஐடி தொழில்நுட்பமும் பொருத்தப்பட்டுள்ளது.
அத்துடன், புலன்கள் அதிகப்படியாகத் தூண்டப்படுவதால் சமநிலை கெடும் பிரச்சினை உள்ள உடற்குறையுள்ளோர் அமைதிபெற, கால்ம் போட்ஸ் எனும் சிறப்பு இடங்கள் நூலகத்தில் உண்டு.
நூலகங்களையும் ஆவணக்காப்பகங்களையும் அனைவரும் அணுகும் இடங்களாக மாற்ற தேசிய நூலக வாரியம் முயன்று வருகிறது. அதற்கேற்ப வாரியத்தின் உடற்குறையுள்ளோருக்கான ஆலோசனைக் குழுவுடன் சேர்ந்து பொங்கோல் நூலகத்தில் இந்த வசதிகள் பொருத்தப்பட்டன. “உடற்குறை உள்ளோர் எளிதில் அணுகும் நூல்தொகுப்பு, அவர்களுக்கு அமைதியான இடம், பார்வைக் குறைபாடு உள்ளோருக்கு வண்ண விசைப் பலகைகள் போன்ற மற்ற நூலகங்களில் இல்லாத சிறப்பு அம்சங்கள் இந்த நூலகத்தில் உள்ளன,” என்று தேசிய நூலக வாரியத்தின் நூல் சேகரிப்புத் திட்டமிடல், மேம்பாட்டு குழுவை சேர்ந்த அதிகாரி ரேணு சிவா குறிப்பிட்டார்.
உடற்குறையுள்ள நூலக உறுப்பினர்கள், நூல்களை ஆறு வாரங்களுக்கு இரவல் பெறுதல் போன்ற கூடுதல் சலுகைகள் பெறுவார்கள்.