ஞாயிற்றுக்கிழமைகளிலும் பொது விடுமுறை நாள்களிலும் பிரபலமான நான்கு இடங்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் வெளிநாட்டு ஊழியர்கள் செல்ல அனுமதிக்கும் முறை நாளடைவில் செயலற்றதாகிவிட்டது என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் நேற்று தெரிவித்தார்.
பிரபலமான இடங்கள் அனுமதித் திட்டம் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்டது. அந்த அனுமதி முறையின் கீழ் வெளிநாட்டு ஊழியர்கள் சைனாடவுன், கேலாங் சிராய், ஜூரோங் ஈஸ்ட், லிட்டில் இந்தியா ஆகிய இடங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நான்கு இடங்களுக்கும் அதிகமானவர்கள் செல்வதால் அங்குள்ளவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவே இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
கொவிட்19 கிருமித்தொற்று காலத்தில் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதியில் வசிப்போரின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் அறிமுகமான இத்திட்டம் அதே மாதத்தில் கைவிடப்பட்டது.
இந்த முறையின் கீழ் எந்தஒரு வெளிநாட்டு ஊழியரும் அந்த இடங்களுக்குச் செல்ல தடை விதிக்கப்படவில்லை என்றும் அந்த இடங்களுக்குச் செல்ல போதுமான அளவில் அனுமதி அட்டைகள் இருந்தன என்றும் அங்கு அளவுக்கு அதிகமான கூட்டம் இல்லை என்றும் அமைச்சர் கூறினார்.