திரு முரளி ஒரு சிறுபான்மையினராக இருப்பது கட்சிக்குப் பாதகமா என்ற கேள்விக்குப் பதிலளித்த திரு லீ, "பல இன, பல சமயங்கள் உள்ள சமூகத்தில் மக்களின் மனதில் இனம் குறித்த சிந்தனைகள் இருக்கலாம். எனினும் இனத்தின் அடிப்படையில் ஒருவருக்கு வாக்களிக்காமல், அவரால் எவ்வாறு பங்களிக்க முடியும், அவரது நேர்மை, அவரது பற்று ஆகியவற்றையே பார்க்க வேண்டும்," என்றார் திரு லீ. "பிரசார நேரங்களில் இனம் குறித்த உணர்ச்சிகள் தலை தூக்குவதும் தவறாகப் பயன்படுத்தப்படுவதும் தெரிந்த ஒன்று. "நான் முதன்முதலில் தேர்தலில் ஈடுபட்ட 1984ஆம் ஆண்டில் என் தொகுதிக்குப் பக்கத்துத்தொகுதி சொங் பூன்.
"அங்கு ஏற்கெனவே நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த திரு எஸ் சந்திரதாஸ் மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சீன வேட்பாளரின் எதிர்க்கட்சி வீடு வீடாகச் சென்றது. அவர்களது செய்தி எளிமையானது. அவர்கள் 'எனக்கு வாக்களியுங்கள்' என்றோ 'போட்டியாளர் நல்லவர் அல்ல,' என்றோ கூறவில்லை. 'அந்த இந்திய ஆடவர் வந்தாரா?', என்றே கேட்டனர்," என்றார் திரு லீ. திரு சந்திரதாஸ் சிறுபான்மை இனத்தவராக இருந்தாலும் அந்தத் தேர்தலில் 56% வாக்குகள் பெற்று தம்மை எதிர்த்து போட்டியிட்ட சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் திரு லிங் ஹாவ் டுங்கை வீழ்த்தினார். திரு லிங்கின் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி 44% வாக்குகள் மட்டுமே பெற்றது. "இணையத்தில் திரு முரளி குறித்த வெளிப்படையான கருத்துகளும் 'சீனருக்கு வாக்களியுங்கள், அதுதான் நல்லது' போன்ற வதந்திகளும் நிலவுவதை நான் அறிவேன். அது தவறான, தீமையான ஒன்று," என்றார் திரு லீ.