தானம் பெறுபவர் யார் எனக் குறிப்பிடாமல் பொதுநல நோக்கத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு சிங்கப்பூரில் முதல்முறையாகத் தானமளிக்கப்பட்ட கல்லீரலுடன் 16 வயது பெண் புத்துயிர் பெற்றிருக்கிறார். லிம் சி ஜியாவுக்கு எட்டு வயதாக இருக்கும்போது, அவருக்கு 'கிளைகோஜன் ஸ்டோரேஜ்' நோய் இருப்பதாகத் தெரிய வந்தது. இந்த அரிய மரபியல் நோய் கல்லீரலைப் பாதிக்கும்போது கல்லீரலில் கிளைகோஜன் திரண்டு, கல்லீரல் வீங்கிப் போகும். தனது மகளின் வயிறு அவளது அண்ணனைப் போலவே துருத்திக் கொண்டிருப்பதைக் கவனித்ததாக சி ஜியாவின் தாயார் திருமதி லிம் லாய் கும் கூறினார். லிம் சி ஜியாவின் அண்ணனுக்கும் அதே நோய் இருந்தது. தற்போது 18 வயதாகும் ஜியாவின் அண்ணனுக்குச் சென்ற ஆண்டு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாகச் செய்யப்பட்டது.
சி ஜியாவுக்கும் கல்லீரல் தானம் தேவைப்பட்டது. அவர் மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தேசிய காத்திருப்போர் பட்டியலில் சேர்க் கப்பட்டார். சென்ற ஆண்டு ஜனவரி மாதம் 54 வயது பாதுகாவல் அதிகாரி பீட்டர் லிம் கோக் செங் தானம் பெறுபவர் யாரென்று குறிப்பிடாமலேயே கல்லீரல் தானம் செய்ய முன்வந்தார். இதனால் காத்திருப்போர் பட்டியலில் ஆக அதிக தேவையுள்ள நோயாளிக்கு அவரது கல்லீரலைப் பயன்படுத்த முடியும். உயிருடன் இருக்கும்போதே கல்லீரலைத் தானம் அளிப்பதற்குப் பரிந்துரைக்கப்படும் அதிகபட்ச வயதான 55 வயதை எட்டுவதற்குமுன் தனது கல்லீரலை அவர் தானமளிக்க விரும்பினார். திரு லிம்மின் கல்லீரல் சி ஜியாவுக்குப் பொருத்தமாக இருந்தது. இவ்வாண்டு மார்ச் 24ம் தேதி தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் சி ஜியாவுக்குப் பத்து மணிநேர உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப் பட்டது.
பீட்டர் லிம் கோக் செங்கிடமிருந்து (இடமிருந்து இரண்டாவது) கல்லீரல் தானம் பெற்ற லிம் சி ஜியா (இடக்கோடி), கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்களில் ஒருவரான பேராசிரியர் கிருஷ்ணகுமார் மாதவன், தேசியப் பல்கலைக்கழக குழந்தைகள் இரைப்பைக் குடலியல் பிரிவின் தலைவர், மூத்த ஆலோசகர் பேராசிரியர் குவாக் செங் ஹாக் (வலக்கோடி). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்