இளம் வயது போதைப் புழங்கிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தப் பிரச்சினையைச் சமாளிக்க மேலும் பலவற்றைச் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று உள்துறை அமைச்சுக்கான நாடாளுமன்றச் செயலாளர் அம்ரின் அமின் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் கைதான போதைப்புழங்கிகளில் 30க்கு குறைந்த வயதுள்ளவர்கள் எண்ணிக்கை, சென்ற ஆண்டுடன் ஒப்பிடும்போது 6% அதிகரித்துள்ளதாக வருடாந்திர போதைப்பொருள் எதிர்ப்பு இயக்க நிகழ்ச்சியில் பேசியபோது அவர் குறிப்பிட்டார்.
சென்ற ஆண்டில் 1,330 பேர் கைதாகி இருக்கிறார்கள் என்று குறிப்பிட்ட அவர், இவர்களின் எண்ணிக்கை கடந்த பல ஆண்டுகளாக கவலை அளிக்கும் வகையில் அதிகரித்து வருவதாகக் கூறினார். இளையர் மற்றும் போதைப்பொருள் சிறப்புப் பணிக்குழு பரிந்துரைத் துள்ளதையொட்டி சனிக்கிழமை போதைப் பொருளைத் தவிர்த்துக்கொள்ள உதவும் இரண்டு சாதனங்களை அம்ரின் அமின் வெளியிட்டார். போதைப் பொருள் தவிர்ப்பு போதனை கையேடு, தேசியச் சேவை தளபதி கையேடு ஆகிய அந்த இரண்டும் நான்கு மொழிகளில் இணையத்தில் கிடைக்கும்.