அங் மோ கியோவில் வீவக அடுக்குமாடிக் கட்டடம் ஒன்றின் வெளிப்புறத்தில் 12வது மாடியிலிருந்து 10வது மாடிக்கு ஆடவர் ஒருவர் இறங்கினார். நேற்று விடியற்காலையில் நடந்த இந்தச் சம்பவம் குறித்து போலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்து அந்த அடுக்குமாடிக் கட்டடத்தில் வசிக்கும் 40 வயது திருமதி லீ என்பவர் கூறுகையில், "நள்ளிரவு நேரம், நான் வரவேற்பறையில் செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்தேன். அப்போது என் வீட்டு சமையலறைப் பக்கம் ஏதோ சத்தம் கேட்டது. பக்கத்து வீட்டுக்காரர்கள் துணி காயப்போடலாம் என்று நினைத்தேன். இருந்தாலும், உறுதி செய்வதற்காக சமையலறைப் பக்கம் சென்று பார்த்தேன். சன்னலுக்கு வெளியே சட்டை அணியாத ஆடவர் ஒருவர் அந்தரத்தில் நிற்பதைக் கண்டு அதிர்ந்தேன். அவர் சன்னலுக்கு அடியில் பொருத்தப்பட்டிருந்த துணி காயப்போடப் பயன்படும் குழாய்களில் நின்று கொண்டிருந்தார்.
"வேகமாகச் சென்று உறக்கத்தில் இருந்த எனது கணவரை எழுப்பினேன். அந்த ஆடவரைப் பார்ப்பதற்கு அவரும் என்னுடன் சமையலறைக்கு அவசரமாக ஓடி வந்தார். "அந்த ஆடவரோ சன்னலுக்கு வெளியே அப்படியே அதே நிலையில் அங்கேயே நின்றிருந்தார். அந்த ஆடவரைப் பார்த்து, இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று நான் கேட்டதற்கு, மன்னிக்கவும், மன்னிக்கவும் என்று பதில் கூறியவாறு அந்த ஆடவர் கீழே இறங்கத் தொடங்கினார். வேகமாக இறங்கிய அவர், கீழே 10வது மாடியில் இருந்த ஒரு வீட்டிற்குள் புகுந்து விட்டார்," எனக் கூறினார். அந்த ஆடவர் திருடனாக இருக்கக்கூடும் என்ற அச்சத்தில் போலிசை அழைத்ததாக திருமதி லீ கூறினார். போலிஸ் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தபோது அந்த ஆடவர் அங்கில்லை. அந்த வீட்டில் இருந்து கள்ள சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டன.