ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியில் கொள்ளையடிக்கப் பட்டதாகக் கூறப்படும் 30,000 வெள்ளியை கைது செய்யப்பட்ட கனடா நாட்டவரிடம் இருந்து தாய்லாந்து போலிசார் பத்திரமாக மீட்டதாகக் கூறப்படுகிறது. பேங்காக்கில் நேற்று கைதுசெய்யப்பட்ட ஹாலந்து வில்லேஜ் கொள்ளைச் சம்பவ சந்தேகப் பேர்வழியான டேவிட் ஜேம்ஸ் ரோச் (படம்), பேங்காக்கில் ஒரு விடுதியில் தங்கியிருந்தார். 26 வயதான அந்த சந்தேகப் பேர்வழி ஒரே பயணப் பையுடன் அந்த விடுதியை அடைந்தார்.
மத்திய பேங்காக்கில் ரட்சதேவி வட்டாரத்தில் உள்ள அந்த விடுதியில் தங்குவதற்காக அவர் முன்பதிவு எதுவும் செய்யவில்லை. உணவு விடுதியை அடைந்த போது டேவிட் மிக அமைதியாகக் காணப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. முன்னதாக அங்கு இரண்டு நாட்கள் மட்டுமே தங்குவதற்கு திட்டமிட்ட அவர், திடீரென தங்கும் நாட்களை நீட்டித்தார். ஞாயிற்றுக்கிழமை அவர் தாய்லாந்து போலிசாரால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டதற்கு முன்னதாக தாய்லாந்து போலிசார், ஜேம்ஸ் ரோச்சை அந்த விடுதி ஊழியரிடம் பேசிக்கொண்டிருந்தபோது கண்டதாகவும் அப்போது அவரை சரியாக அடையாளம் தெரியவில்லை என்றும் கூறினார். ஆனால் அங்குள்ள பதிவேட்டில் அவரது பெயர் பதிவாகியிருந்ததைக் கண்டதும்தான் ஜேம்ஸ் ரோச் அங்கு தங்கியிருப்பதை அவர்கள் உறுதி செய்தனர்.