அரசாங்கத் துறை செலவினத்திலும் ஆளுமையிலும் பல குறைபாடுகள் இருப்பதாக அண்மையில் தலைமைத் தணிக்கையாளர் அலுவலகம் விடுத்த அறிக்கையில் தெரியவந்திருப்பது, கவலைத் தரக்கூடிய பொதுமக்கள் தொடர்பான அம்சங்கள் என்றும் அதற்கு அரசாங்கம் போதிய அளவுக்குப் பதில் அளிக்க வேண்டும் என்றும் பாட்டாளிக் கட்சி தெரிவித்துள்ளது.
குறிப்பாக கல்வி அமைச்சின் கீழ்த் திரும்பத்திரும்ப குறைபாடுகள் காணப்பட்டிருப்பது கவலைத் தருவதாக இருக்கிறது என்று அந்தக் கட்சி அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. தேசிய வளர்ச்சி அமைச்சு, உள்துறை அமைச்சு ஆகியவற்றின் செயல்களில் காணப்படும் குறைபாடுகளையும் பாட்டாளிக் கட்சி தனது அறிக்கையில் குறிப்பிட்டது. வரும் நாடாளுமன்றக் கூட்டத்தில் அமைச்சர் களிடமிருந்து பதில் பெறுவதற்காக பல கேள்விகளை பாட்டாளிக் கட்சி தாக்கல் செய்யும் என்றார் கட்சியின் ஊடகக் குழுவின் துணைத் தலைவரும் தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினருமான லியோன் பெரேரா.