தமிழவேல்
சிங்கப்பூரின் ஸிக்கா தொற்று பிரச்சினையைச் சமாளிக்க மூன்று கட்ட செயல்திட்டத்தை சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் நாடாளுமன்றத்தில் நேற்று முன்வைத்தார். ஸிக்கா தொற்றுக்குத் தயாராக இருத்தல், முதற்கட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல், நீண்ட காலத்துக்கு அதை நிர்வகித்தல் ஆகிய மூன்று பரந்த உத்திகளை முன் வைத்த அமைச்சர், இப்போது கொசு ஒழிப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்பட்டு வரு கிறது என்று கூறினார். ஸிக்கா தொற்று தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பத்துப் பேர் மொத்தம் 12 கேள்விகளை முன்வைத்தனர். சுகாதார அமைச்சின் சார்பில் பேசிய அமைச்சர் கான், நேற்று முன்தினம் நண்பகல் நிலவரப்படி மொத்தம் 333 பேர் ஸிக்கா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்களில் எட்டுக் கர்ப்பிணிகளும் அடங்குவர் என்றும் குறிப்பிட்டார்.
ஸிக்கா தொற்று பரவிய ஏழு இடங்களை உறுதிப்படுத்திய அமைச்சர், பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் குணமடைந்துவிட்டனர் என்றும் அல்லது அவர்களிடம் ஸிக்கா தொற்று அறிகுறிகள் முற்றிலும் மறைந்துவிட்டன என்றும் குறிப் பிட்டார். கர்ப்பிணிகளின் உடல்நிலையும் அவர்களின் குழந்தைகளின் உடல்நிலையும் தொடர்ந்து உன் னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வரும் என்று அவர் சொன்னார். கொசுக்களால் ஸிக்கா தொற்று பரவுவதாலும் பாதிக்கப் பட்டவர்களில் பெரும்பாலானோர் எந்த அறிகுறிகளையும் காட்டாத தால் ஸிக்கா நோயாளிகளை அரசு மருத்துவமனையில் தனி மைப்படுத்தாது என்றார் அவர். ஸிக்காவுக்கு எதிரான நட வடிக்கை குறித்து மேலும் விவரித்த திரு கான், ஈராண்டு களுக்குமுன் சுகாதார அமைச்சு, தேசிய சுற்றுப்புற வாரியத்துடன் இணைந்து ஸிக்கா தொற்று கண்காணிப்புத் திட்டம் ஒன்றைத் தொடங்கியதாகக் கூறினார்.
அதன்கீழ் கிட்டத்தட்ட 200 மருந்தகங்கள் மூலம் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ஆகஸ்ட் வரை கிட்டத்தட்ட 4,000 பேரிடம் ரத்தப் பரிசோ தனை செய்யப்பட்டது என்றும் அதன்பின்னரே சிங்கப்பூரில் முதல் ஸிக்கா கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது என்றும் அவர் விளக்கினார். சிங்கப்பூரின் முதல் ஸிக்கா தொற்று ஆகஸ்ட் 27ஆம் தேதி அறிவிக்கப்பட்டாலும் அதைத் தொடர்ந்து நடந்த பின்னோட்ட நடவடிக்கையினால் அடுத்த நாள் ஸிக்கா தொற்றியவர்களின் எண்ணிக்கை 41ஆக அறி விக்கப்பட்டது என்று அமைச்சர் விளக்கினார்.
"ஆனால் பலர் இதனைத் தவறாகப் புரிந்துகொண்டு சுகாதார அமைச்சு வேண்டுமென்றே ஸிக்கா தொற்று குறித்த தகவல்களை மறைத்துவிட்டது எனக் கருதினர்," என்றார் திரு கான். இவற்றைத் தவிர்த்து ஸிக்கா நோய்க்கான போராட்டம் நீண்ட காலத்துக்கானது என்றும் அதற்கு பொதுமக்களிடையே விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஸிக்கா குறித்த ஆய்வுகள் நடத் தப்படும் என்றும் கூறினார். "சிங்கப்பூரில் ஸிக்கா தொடர் பான தொடர் ஆய்வுகள் நடந்து வருகின்றன. சோதனைகள் செய்து அவற்றை மருந்தகங் களுக்குக் கொண்டு வருவதற்கு கால அவகாசம் எடுக்கும்," என்றார் அமைச்சர். ஸிக்காவுக்கு எதிராக நட வடிக்கை எடுக்கும் அதே நேரத் தில் வாழ்க்கை வழக்கம்போலத் தொடரவேண்டும் என்றும் திரு கான் சொன்னார்.
சிக்லாப் தொகுதியில் ஸிக்கா ஒழிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள தேசிய சுற்றுப்புற வாரிய ஊழியர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்