சாலைத் தடுப்பை இடித்துத் தள்ளி விட்டு நான்கு தடங்களைத் தாண்டி, எதிரே பயணிகளுடன் வந்துகொண்டிருந்த பொதுப் பேருந்து மீது மோதி பின் சாலைக்கு வெளியில் பாய்ந்தது ஒரு வாகனம். நேற்றுக் காலையில் யூனோஸ் லிங்க் சாலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. நல்லவேளையாக இந்த விபத்தில் யாருக்கும் காயமில்லை.
மோதிய அந்த சிவப்பு நிற ஹோண்டா வாகனத்தின் ஓட்டுநர், சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்த அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்து அவர்களைத் தள்ளிவிட்டு பரபரப்பேற்படுத்தினார். சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு அதிகாரிகள் மூன்று பேருடன் மருத்துவ உதவியாளர் ஒருவரும் அந்த ஓட்டுநரிடம் நீண்ட நேரமாகப் பேசி சமாதானப்படுத்தினர்.
சிவப்பு நிற ஹோண்டா வாகனம் எதிர்த்திசையில் இருந்து அதிவேகமாகச் சென்றதாக அப்போது அந்த சாலையில் வாகனமோட்டிச் சென்ற திரு சுங் சியூ மெங் என்பவர் கூறினார். இது பற்றி சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்கு காலை 7.30 மணிக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும் சம்பவ இடத்திற்கு மருத்துவ அவசர வாகனம் ஒன்றை தாங்கள் அனுப்பி வைத்ததாகவும் குடிமைத் தற்காப்புப் படையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
அதிகாரிகளைத் தள்ளி விட்ட குற்றத்திற்காக விபத்து ஏற்படுத்திய வாகன ஓட்டுநர் கைது செய்யப்பட்டதாக போலிஸ் தெரிவித்தது. அரசாங்க அதிகாரியை வேலை செய்யவிடாமல் வலுக்கட்டாயமாக தடுத்த குற்றத்திற்காக குறைந்தது 4 ஆண்டு சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
யூனோஸ் லிங்க் சாலையில், சாலைத் தடுப்பை மோதித் தள்ளி விட்டு எதிரே வந்த பயணிகள் பேருந்தில் மோதி, சாலைக்கு வெளியில் பாய்ந்த சிவப்பு நிற ஹோண்டா வாகனம். படம்: எஸ்பிஎச்