ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 41ல் சென்ற செவ்வாய்க்கிழமை மூண்ட தீச் சம்பவத்தின் தொடர்பில் 41 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலிஸ் நேற்று தெரிவித்தது. அவர் வேண்டுமென்றே அத்தீயை மூட்டியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அந்த ஆடவர் ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 41ல் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார் என்று தெரிவித்த போலிஸ், இன்று அவர் மீது குற்றம் சாட்டப்படும் என்றும் அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனையோ அல்லது பத்தாண்டு வரையிலான சிறை, அபராதம் ஆகியவை விதிக்கப்படலாம் என்றும் தெரிவித்தது.
இதற்கிடையே, சேதமுற்ற ஈரச்சந்தை, இரு காப்பிக் கடைகள் ஆகியவற்றின் உரிமையாளர்களுக்கு உதவி புரிய பல அமைப்புகள் முன்வந்துள்ளன. ஜூரோங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆங் வெய் நெங் நேற்று முன்தினம் இரவு கடை உரிமையாளர்களைச் சந்தித்தார். அவருடன் வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், தேசிய சுற்றுப்புற வாரியம், சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஆகியவற்றைச் சேர்ந்த பிரதிநிதி கள் கலந்துகொண்டனர். பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு கிளமெண்டி, கிம் மோ ஆகிய வட்டாரங்களில் இருக்கும் 27 ஈரச்சந்தை கடைகள், 22 காப்பிக்கடைகள் ஆகியவற்றுக்கு இடம்மாற வீவகழகமும் தேசிய சுற்றுப்புற வாரியமும் உதவியுள்ளன. அவ்வாறு இடம்மாறும் கடை உரிமையாளர்கள் மாதத்துக்கு $200=$850 வரை வாடகை செலுத்துவார்கள்.
ஈரச்சந்தை நடத்துநருக்கு கடை உரிமையாளர்கள் செலுத்த வேண்டிய வாடகை, சேவை, பயனீட்டுக் கட்டணங்கள் அவை வியாபாரத்தில் ஈடுபடாத காலத்தில் தள்ளுபடி செய்யப்படும். இரு காப்பிக் கடை உரிமையாளர்களுடன் வீவகவும் தேசிய சுற்றுப்புற வாரியமும் இணைந்து செயலாற் றும். மேலும் பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு தாமான் ஜூரோங்கில் உள்ள சமூக சேவை அலுவலகம், தென்மேற்கு சமூக மேம்பாட்டு மன்றம் அளிக்கும் உடனடி நிவாரணத் தொகையை விநியோகிக்கும் என்றும் தெரிவிக்கப் பட்டது.