ஷெங் சியோங் பேரங்காடி கடைத்தொகுதி முதலாளியான லிம் ஹோக் சையின் தாயாரைக் கடத்திய குற்றவாளி செய்த மேல்முறையீட்டை நீதிமன்றம் நேற்று நிராகரித்து விட்டது. இதனையடுத்து அந்தக் குற்றவாளி ஆயுள் தண்டனையை அனுபவிக்கவிருக்கிறார். அதோடு மூன்று பிரம்படி தண்டனையும் அவருக்கு உண்டு. திரு லிம்மின் தாயாரான திருமதி இங் லை போவை, 79, தன்னுடைய காரினுள் ஏறவைத்து அவரைக் கடத்திச்சென்று $20 மில்லியன் பிணைப்பணம் கேட்டதாகக் கூறும் குற்றச்சாட்டின் பேரில் லீ ஸீ யோங், 42, என்பவர் குற்றவாளி என்று தீர்மானிக்கப்பட்டார்.
அவருக்கு ஆயுள் தண்டனையும் மூன்று பிரம்படி தண்டனையையும் சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் விதிக்கப்பட்டது. அந்த ஆயுள் தண்டனை, லீ கைதான 2014 ஜனவரி 9ஆம் தேதி முதல் தொடங்கும் என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தண்டனையை எதிர்த்து லீ மேல்முறையீடு செய்திருந்தார். ஆயுள் தண்டனைக்குப் பதிலாக தனக்கு மரண தண்டனையை விதித்துவிடும்படி லீ நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டிருந்தார். ஆனால் உயர்நீதிமன்றம் அந்த வேண்டுகோளை நிராகரித்துவிட்டது. மேல்முறையீட்டில் அவர் தோல்வி அடைந்துவிட்டார்.