ஆப்பிரிக்காவின் கெமரூனுக்கு அருகிலுள்ள கடற்பகுதியில் சிங்கப்பூரின் கொடியைத் தாங்கிய கப்பல் ஒன்று கடத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
'பெரன்ட்ஸ் சீ' என்ற அந்தக் கப்பலை கமரூனின் தனியார் படை ஒன்றைச் சேர்ந்த துப்பாக்கிக்காரர்கள் கைப்பற்றினர். 'ஏகே 47' ரக துப்பாக்கிகளை வைத்திருந்த அந்தத் துப்பாக்கிக்காரர்கள், கப்பலின் 26 பணியாளர்களைக் கடத்தி வைத்திருப்பதாக சிங்கப்பூரில் தளம் கொண்டிருக்கும் 'ஈஸ்டர்ன் பசிபிக் ஷிப்பிங்' நிறுவனம் தெரிவித்தது.
வர்த்தக ரீதியான பிரச்சினை ஒன்றின் காரணமாக இந்தக் கடத்தல் நடந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
கடத்தப்பட்ட கப்பல் பணியாளர்களில் இந்தியா, உக்ரேன், சீனா, பிலிப்பீன்ஸ், துருக்கி ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அடங்குவர் என்றது 'ஈஸ்டர்ன் பசிபிக் ஷிப்பிங்'. எந்த விதமான தூண்டுதலுமின்றி செய்யப்பட்ட இந்த வன்செயலைக் கண்டிப்பதாகவும் இதற்கு உரிய சட்ட நடவடிக்கையை கெமரூனிய அரசாங்கம் எடுக்கவேண்டும் என்றும் அந்நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. கடத்தப்பட்ட கப்பலில் இதுவரை யாருக்கும் காயங்கள் ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளிவரவில்லை என்றது அந்நிறுவனம்.