பொதுக்கல்விச் சான்றிதழ் சாதாரண நிலை கணக்கு, அறிவியல் தேர்வுகளில் ஏமாற்ற மாணவர்களுக்கு உதவி செய்த துணைப்பாட ஆசிரியருக்கு மூன்று ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டில், தேர்வுகளை எழுத வேண்டிய சீனாவைச் சேர்ந்த ஆறு மாணவர்கள் கைத்தொலைபேசிகளையும் புளுத்தூத் சாதனங்களையும் திருட்டுத்தனமாக தேர்வு அறைக்குள் கொண்டு சென்றனர். காதுகளில் மறைவாய் வைக்கப்பட்டிருந்த கைபேசிச் செவிக்கருவிகள் வழி பதில்கள் மாணவர்களிடம் தெரிவிக்கப்பட்டன.
துணைப்பாட ஆசிரியர் டான் ஜியா யான், தனிப்பட்ட முறையில் தேர்வை எழுதுபவராக மற்றோர் இடத்தில் தேர்வை எழுதி, ஃபேஸ்டைம் நேரலைச் சேவை வழியாக தனக்கு உடந்தையாக இருப்பவர்களிடம் தேர்வுத் தாட்களைக் காண்பித்தார். அவர்கள் கேள்விக்கான பதில்களை மாணவர்களிடம் செவிக்கருவி வாயிலாகத் தெரிவிப்பர்.
தகுதி அடிப்படை அமைப்பைக் குலைக்கும் விதமாக அவர்கள் நடந்துகொண்டதாக மாவட்ட நீதிபதி கென்னத் யாப் தெரிவித்தார்.
சிங்கப்பூரரான 33 வயது டான், தன்மீது விதிக்கப்பட்ட 27 குற்றச்சாட்டுகளை கடந்தாண்டு ஏப்ரல் 16ஆம் தேதி ஒப்புக்கொண்டார்.