சிங்கப்பூரின் பல பகுதிகளில் விசாக தினம் நேற்று விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
செயின்ட் மைக்கல் சாலையில் ஸ்ரீ லங்க ராமாயா ஆலயத்தில் பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். "விசாக தினத்தன்று பெளத்த சமயத்தின் முக்கிய சின்னமான புத்தரின் புனிதப் பல், ஆலயத்தைச் சுற்றி ஊர்வலமாகக் கொண்டு செல்லப்படுகிறது. இதைக் காண நூற்றுக்கணக்கான பக்தர்கள் திரளாக வருவார்கள்," என்றார் ஸ்ரீ லங்க ராமாயா ஆலயத்தில் 13 ஆண்டுகளாக செயற்குழு உறுப்பினராக உள்ள திரு நிர்மல் டி சில்வா, 54.
இவ்வாலயம் முற்றிலும் நன் கொடையை நம்பி இயங்குகிறது என்றும் விசாக தினத்தன்று ஓவியங்கள், கொடிகள் போன்ற வற்றை விற்பனை செய்து ஆலயம் நிதி திரட்டுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் கொழும்புவிலிருந்து சிங்கப் பூருக்கு வேலைதேடி வந்த திரு வாட்டி காமினி கமாகே, 55, ஆண்டுதோறும் விசாக தினத் தன்று ஸ்ரீ லங்க ராமாயா ஆலயத் துக்கு வருவது வழக்கம் என்றார்.
இலங்கையில் அண்மையில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகளில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சோகம் கப்பியிருந்தாலும் அங்கு தம் உறவினர்கள் துணிச்சலாகவும் குதூகலத்துடனும் விசாக தினத்தைக் கொண்டாடியதாகச் சொன்ன திருவாட்டி காமினி, இலங்கையில் போர் முடிந்த பத்தாண்டு நினைவு தினமும் விசாக தினமும் ஒரே நாளில் அனுசரிக்கப்பட்டதாகச் சொன் னார்.
சிங்கப்பூரில் 1972ல் தோற்றம் கண்ட ஆகப் பழமையான ஆலயங் களில் ஒன்றான சாக்கியமுனி புத்த கயா ஆலயத்தில் கொண்டாட் டங்களும் வழிபாடுகளும் நேற்று களைகட்டின. 15 மீட்டர் உயர புத்தர் சிலை அமைந்துள்ள இந்த ஆலயம், 'ஆயிரம் விளக்குகள் கொண்ட ஆலயம்' என்று பிரபலமாக அறியப்படுகிறது.
ரேஸ் கோர்ஸ் சாலையில் அமைந்திருக்கும் இந்த ஆலயத் திற்கு கடந்த 10 ஆண்டுகளாக விசாக தின வழிபாட்டிற்காக வருகிறார் 69 வயதான திருவாட்டி இந்திரா தங்கவேலு.
"இந்த ஆலயத்தில் வழிபடுவது எனக்கு அமைதியையும் மன நிம்மதியையும் தருகிறது. என் வேண்டுதல்களும் பெரும்பாலும் நிறைவேறுகின்றன. ஆரோக்கியம், மகிழ்ச்சி ஆகியவை வாழ்வின் முக்கியமான அம்சங்கள். இதை மனதில் கொண்டு பிரார்த்தனை செய்வது என் வழக்கம்," என்றார் திருவாட்டி இந்திரா.
"புத்தர் சிலையைச் சுற்றி 1000 விளக்குகள் இருப்பதால், அவரின் பார்வை மேலும் தெளிவாக, ஒளிமையமாக இருக்கும் என்பது ஒரு நம்பிக்கை. புக்கிட் பாத்தோக் வட்டாரத்தில் தங்கியிருக்கிறேன். சற்று தொலைவில் குடியிருந்தாலும் விசாக தினத்தன்று இந்த ஆலயத்திற்கு வர விரும்புகிறேன்," என்றார் திருமதி செண்பகவள்ளி சாம்பா, 65.
புத்திஸ்ட் ஃபெல்லோஷிப் சங் கத்தில் நடைபெற்ற விசாக தினக் கொண்டாட்டத்தில் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் கலந்துகொண்டு கௌதம புத்தரின் சிலைக்கு புனித நீரை ஊற்றும் சடங்கில் பங்கேற்றார்.
அங்கு கலந்து கொண்ட சுமார் 300 பேரிடையே உரையாற்றிய திரு ஈஸ்வரன், சமயக் குழுக் களுக்கிடையே வன்முறை, கோபத் தைத் தூண்டும் வகையிலான வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சு உள்ளிட்ட பொறுப்பற்ற பேச்சு, போலிச் செய்திகள் ஆகிய வற்றால் உருவாகும் சவால்களைக் குறிப்பிட்டார்.
சமூகங்களுக்கு இடையிலான புரிந்துணர்வை வளர்க்கும் முயற்சி கள், உண்மைகளைக் கண்டறிதல், பொதுமக்களிடையே விழிப்பு உணர்வை ஏற்படுத்துதல் ஆகியன வும் அவசியம் என்றார்.