கான்கிரீட் பாளங்களில் (concrete slabs) மறைத்து வைக்கப்பட்டு கள்ளத்தனமாகக் கொண்டு வரப்பட்ட வரி செலுத்தப்படாத 12,749 அட்டைப் பெட்டி சிகரெட்டுகள் துவாஸ் சோதனைச் சாவடியில் பிடிபட்டதாக குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் நேற்று அறிக்கை மூலம் தெரிவித்தது. சென்ற ஜூலை மாதம் 27ஆம் தேதி காலை 9 மணியளவில் துவாஸ் சோதனைச் சாவடி வழியாக வந்த மலேசிய பதிவெண் கொண்ட ஒரு லாரியை குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணைய அதிகாரிகள் சோதனையிட்டனர். அந்த லாரியில் 16 கான்கிரீட் பாளங்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
வாகனத்தைச் சோதனையிட்டபோது ஏதோ வித்தியாசமாக இருப்பதாக அதிகாரிகள் உணர்ந்தனர். இதையடுத்து, அந்த கான்கிரீட் பாளங்களில் அவர்கள் துளையிட்டுப் பார்த்தபோது, அவற்றில் சிகரெட் பெட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து, அந்த லாரியை ஓட்டி வந்த 25 வயது மலேசிய ஆடவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டார். மேல்விசாரணைக்காக இந்த வழக்கு சிங்கப்பூர் சுங்கத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
கடந்த ஐந்தாண்டுகளில் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணைய அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளில் இதுவே ஆகப் பெரிய அளவு. கள்ளத்தனமாகக் கடத்தி வரப்பட்ட இந்த சிகரெட்டுகளுக்கு பொருள், சேவை வரியாக மொத்தம் $1,331,020 செலுத்தப்பட்டிருக்க வேண்டும் எனக் கூறப்பட்டது. விசாரணை தொடர்கிறது.
இத்தகைய கடத்தல் வழிகளைப் பின்பற்றி ஆயுதங்களும் வெடிபொருட்களும் கடத்தப்படலாம் என்பதால் சிங்கப்பூரின் எல்லைப் பாதுகாப்பிற்கு ஆணையம் அதிக முன்னுரிமை அளித்து வருகிறது.