சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி இவ்வாண்டில் மெதுவடைந்திருக்கலாம். இருப்பினும் தற்போதைய நிலைமை மோசமாக இல்லை என்று பிரதமர் லீ குறிப்பிட்டார். பிரதமர் தேசிய தினப் பேரணியில் மாண்டரின் மொழியில் உரையாற்றியபோது பொருளியல் நிலவரம் குறித்து பேசினார்.
“ஊழியர்கள் கவலை அடைந்தாலும் மெதுவான வளர்ச்சி வேலைகளில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.இதற்கு முன்னரும் இதைப்போன்ற மந்தநிலையை நாம் கண்டிருக்கிறோம். எனவே இப்போதுள்ள நிலவரத்தை வெல்ல இயலும் என்ற நம்பிக்கை நம்மிடம் உண்டு. உலக தேவையும் பன்னாட்டு வர்த்தகமும் வலுவடைந்து வருவதன் காரணமாக சிங்கப்பூரின் வளர்ச்சியும் மெதுவடைந்திருக்கிறது. இது உற்பத்தித் துறையையும் வர்த்தகம் தொடர்பான சேவைகளையும் பாதித்துள்ளது.
“இணைய வர்த்தகம் காரணமாக சில்லறை வர்த்தகம் தொடர்ந்து அழுத்தத்திற்கு ஆளாகி வருகிறது. இப்படியெல்லாம் இருந்தபோதிலும் ஆட்குறைப்பு, வேலையின்மை ஆகியவற்றின் விகிதம் இன்னும் குறைவாகவே உள்ளது. எனவேதான் இப்போதைய நிலவரம் எந்தவொரு சமாளிப்பு நடவடிக்கைக்கும் அவசியமானதானத் தோன்றவில்லை.
“சிங்கப்பூர் ஒரு சிறிய வெளிப்படையான பொருளியலைக்கொண்டிருக்கிறது. உலகமயத்தால் அது பயனடைந்து வந்துள்ளது. அமெரிக்க-சீன வர்த்தக உறவுகள் தொடர்ந்து மோசமடைந்தால் உலகளவிலான தாக்கத்தை அது ஏற்படுத்தும். அதன் விளைவாக சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி பாதிக்கப்படுவதோடு நமது எதிர்காலம் அதிக சிக்கலான ஒன்றாக ஆகிவிடும்,” என்றார் பிரதமர்.
சீனாவுக்குப் பெருமளவிலான சரக்குகளை ஏற்றுமதி செய்யும் உள்ளூர் நிறுவனங்களோடு சீனாவிலுள்ள தொழிற்சாலைகளில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கும் அதனால் சிக்கல் ஏற்படும்.
அதேநேரம் சீனாவில் தயாரிப்பை மேற்கொள்ள வேண்டாம் என முடிவெடுக்கும் நிறுவனங்கள் சிங்கப்பூருக்கு வரக்கூடும் என்றார் பிரதமர்.