சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம், சிரமப்படுவோருக்குச் சமூக ஆர்வலர்கள், மருத்துவ உதவியாளர்கள், முதலுதவியாளர்கள், இரத்த நன்கொடையாளர்கள், நிவாரண ஊழியர்கள் ஆகியோர் மூலம் இன்றுவரை சேவைகள் புரிந்து வருகிறது என்று சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் 70ஆம் ஆண்டு விழா வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அதிபர் ஹலிமா யாக்கோப் தெரிவித்தார்.
நீண்டகால தொண்டூழியர்களைக் கௌரவிக்க 56 தனி நபர்களுக்கும் 20 சமூக பங்காளித்துவ அமைப்புகளுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. கிட்டத்தட்ட 300 பேர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சி ‘கிராண்ட் கோப்தான் வார்ட்டர்ஃபிரண்ட்’ தங்கும் விடுதியில் நடந்தேறியது. அதிபர் ஹலிமா, நிகழ்ச்சியில் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் 70 ஆண்டு வரலாற்றை அனுசரிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள கண்காட்சியையும் மரபுடைமை இணையத்தளத்தையும் தொடங்கிவைத்தார்.
சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் திரு டீ துவா பா, ஆக உயரிய விருதான மனிதாபிமான விருதைப் பெற்றார். இந்தச் சங்கத்திற்கு 12 ஆண்டுகள் சேவையாற்றிய திரு டீ, சிங்கப்பூரில் இந்த அமைப்பின் 70 ஆண்டுகாலத் தாக்கத்தை நினைவுகூர்ந்தார்.
உயரிய பரிந்துரை விருதுகளைப் பெற்ற ஐவரில் 30 வயது திரு சென்ராயா பெருமாளும் ஒருவர்.
“நமக்கு நல்ல வாழ்க்கை அமைந்துள்ளது. கை, கால் எல்லாம் சீராகச் செயல்படுகின்றன. ஏன் நேரத்தை வீண்ணாக்க வேண்டும்? மற்றவர்களுக்கு நல்லது செய்து நம்மால் முடிந்த பங்கை ஆற்றலாம்,” என்றார் திரு பெருமாள்.
பரிந்துரை விருதுகளைப் பெற்ற 27 வெற்றியாளர்களில் திருமதி கலைச்செல்வி ராமகிருஷ்ணனும், 44, திரு ஷடஜி குப்தாவும், 40, இடம்பெற்றனர்.
“ஒருவருக்கு மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்கள் தாக்கும் நேரத்தில் ஒவ்வொரு வினாடியும் முக்கியம். தக்க நேரத்தில் முதலுதவி செய்வதால் பாதிக்கப்பட்ட நபரின் உயிரைக் காப்பாற்றலாம்,” என்றார் 13 ஆண்டுகளாக செஞ்சிலுவைச் சங்கத்தில் தொண்டூழியராக இருந்து வரும் முதலுதவிப் பயிற்றுவிப்பாளர் திருமதி கலைச் செல்வி.
“சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் பல பிரிவுகளுக்கிடையே நல்ல ஒற்றுமை உள்ளது. நாங்கள் உணவுதவிப் பிரிவில் பணியாற்றினாலும் முதியவர், போக்குவரத்து போன்ற பிரிவுகளுடனும் இணைந்து வேலை செய்வோம். இதனால் தரமான பல உதவிகளை இந்த அமைப்பு வழங்க முடிகிறது,” என்றார் திரு ஷடஜி.