அச்சப்படுவதும் பதற்றப்படுவதும் கொரோனா கிருமியை விட அதிகத் தீங்கை இழைக்கலாம் என்று பிரதமர் லீ சியன் லூங் கூறியுள்ளார். தற்போது நாட்டை மெல்ல மெல்ல பதற்றநிலைக்குத் தள்ளி வரும் கொரோனா கிருமித்தொற்று தொடர்பில் அவர் இவ்வாறு பேசியிருந்தார்.
இந்தக் கிருமித்தொற்று, நாட்டின் சமூக ஒற்றுமைக்கும் மன ரீதியான மீள்திறனுக்கும் சவால் விடுப்பதாக அவர் குறிப்பிட்டார்.
“பயமும் கவலையும் மனிதனுக்கு இயல்பாகத் தோன்றும் உணர்ச்சிகள்தாம். அறிமுகமில்லாத ஒரு புதிய நோயிலிருந்து நாம் நம்மையும் நம் குடும்பத்தினரையும் பாதுகாக்க நினைப்போம்.
“ஆனால் கிருமியை விடக் கூடுதல் தீங்கை இந்த அச்ச உணர்வு ஏற்படுத்திவிடலாம். பதற்றத்தில் சிலர் நிலைமையை மேலும் மோசமாக்கிவிடலாம்,” என்று கூறினார் திரு லீ.
இணையத்தில் கிருமி தொடர்பான பொய்ச் செய்திகள் பரப்பு வதையும் முகக்கவசங்கள் அல்லது உணவுப்பொருட்களைத் தேவையின்றி வாங்கி அடுக்கி வைத்துக்கொள்வதையும் குறிப்பிட்ட ஒரு சாராரை இந்தக் கிருமித்தொற்றுக்குக் குறை கூறுவதையும் அவர் உதாரணங்களாக சுட்டினார்.
நாளுக்கு நாள் நிலைமை மாறி வருவதால், கிருமித்தொற்று தொடர்பில் உடனடியாகச் செயல்படும் நிலை சிங்கப்பூருக்கு ஏற்பட்டுள்ளது என்றார் அவர். கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் ஆகியோரைத் தனிமைப்படுத்தியதன் மூலம் கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தியுள்ளதாக அவர் சொன்னார்.
இதற்கிடையே எவ்விதத் தொடர்பும் இல்லாத நிலையிலும் கடந்த சில நாட்களில் சிலருக்கு கொரோனா கிருமித்தொற்றியிருப் பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாடு தீவிரப்படுத்தியுள்ளதாக திரு லீ சொன்னார்.
வரும் நாட்களில் இத்தகைய சம்பவங்கள் கூடும் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் திரு லீ பகிர்ந்து கொண்டார்.
“எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போனால், நம் அணுகு முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும். கிருமி இருப் பதாக சந்தேகிக்கும் ஒவ்வொரு நபரையும் மருத்துவமனையில் அனுமதித்தால், இடப் பற்றாக்குறை ஏற்படும்,” என்றார்.
மிக மோசமான அளவில் உடல் நலம் பாதிக்கப்படாதவர்கள் தனியார் மருந்தகங்களுக்குச் சென்று வீட்டில் ஓய்வெடுக்கலாம் என ஆலோசனை கூறினார். இதனால் சிறார்கள், முதியவர்கள், மருத்துவப் பிரச்சினைகள் உள்ளவர்கள் ஆகியோருக்கு மட்டும் மருத்துவமனைகள் இயங்கும் என்றார் அவர்.
தற்போது சிங்கப்பூர் அத்தகைய நெருக்கடி நிலையில் இல்லாவிட்டாலும் கிருமித்தொற்று மோசம் அடைந்து அதனால் ஏற்படக்கூடிய இத்தகைய சூழல்களுக்கு சிங்கப்பூரர்கள் தயாராக இருக்கவேண்டும் என்றார்.
இந்நிலையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் நிதானத்துடன் இருந்தால் இந்த நெருக்கடி காலத்தை நாம் ஒன்றாக எதிர்கொள்ள முடியும் என்று நினைவுறுத்தினார் பிரதமர் லீ.
பள்ளிகளில் ஒன்றுகூடல்களைக் குறைப்பது, பெருமளவில் ஏற்பாடு செய்யப்படும் பொது நிகழ்ச்சிகளில் கூடுதல் முன்னெச்சரிக்கை நட வடிக்கைளை மேற்கொள்வது போன்றவை புதிதாக நடப்புக்கு வந்துள்ள திட்டங்கள்.
நோய்ப்பரவல் விழிப்புநிலைக் குறியீடு ஆரஞ்சு நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் தங்களின் சுகாதாரத்தைப் பேணுவதுடன் தங்களின் உடல் வெப்ப நிலையைக் கண்காணிப்பதும் உடல்நலமில்லாத பட்சத்தில் கூட்டமான இடங்களைத் தவிர்ப்பதன் வழியும் தங்களின் பங்கை ஆற்றலாம் என்றார் திரு லீ.
இதுவரை இங்கு 33 பேர் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.