வெளிநாடுகளிலிருந்து மார்ச் 14 முதல் 20 வரை சிங்கப்பூர் திரும்பிய ஊழியர்கள் அனைவருக்கும் கட்டாய விடுப்பு விதிக்குமாறு மனிதவள அமைச்சு நிறுவனங்களுக்கு வலியுறுத்தியுள்ளது. நேற்று இரவு 11.59 மணியிலிருந்து சிங்கப்பூருக்கு வரும் அனைத்துப் பயணிகளுக்கும் 14 நாட்கள் வீட்டிலேயே தங்கியிருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
இந்தப் புதிய கட்டுப்பாடு நடப்புக்கு வருவதற்கு முன்னர் நாடு திரும்பிய தங்களது ஊழியர்களைக் கட்டாய விடுப்பில் செல்லப் பணிக்கும் முதலாளிகள் மனிதவள அமைச்சிடமிருந்து நிதி ஆதரவைக் கோர முடியும். கொரோனா கிருமி பரவலின் பாதிப்புகளைத் தொடர்ந்து நிறுவனங்களின் நிதிச் சுமையைத் தணிக்க அமைச்சு இத்திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இங்கு கிருமித்தொற்று அதிகரித்திருப்பதுடன் பெரும்பாலானாவை வெளியிலிருந்து வந்த தொற்றுகளாக இருப்பதால் கொரோனா கிருமி பரவலைக் கட்டுப்படுத்த பள்ளிகள் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளன. அதையடுத்து இந்த முயற்சி எடுக்கப்படுகிறது.
மார்ச் 14 முதல் நேற்று வரையில் வெளிநாட்டிலிருந்து திரும்பிய அனைத்து மாணவர்களும் ஊழியர்களும் திரும்பிய தேதியிலிருந்து 14 நாட்கள் கட்டாயமாக விடுப்பில் இருக்கவேண்டும். நேற்று இரவு 11.59 மணி முதல் சிங்கப்பூருக்குள் நுழையும் அனைத்து பயணிகளுக்கும் 14 நாட்கள் வீட்டிலேயே தங்கியிருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. அவர்கள் 14 நாட்களுக்கு தங்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாது.
“இந்த தேசிய நடவடிக்கையால், இரு வார காலத்துக்குத் தங்கள் குழந்தைகளுக்கு பராமரிப்பு வழங்க வேண்டியுள்ளதால் பல பெற்றோர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அறிகிறோம். அதே நேரத்தில் அண்மையில் பயணம் செய்தவர்களால் கிருமித்தொற்று மேலும் பரவுவதைத் தடுக்க வேலையிடத்திலிருந்து விலகி இருக்க இது ஒரு பயனுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும்,” என்றது அமைச்சு.
இந்த 14 நாள் காலக்கட்டத்தில் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்கும் நீக்குப்போக்கான ஏற்பாடுகளை நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று மனிதவள அமைச்சு கூறியது.
சில நிறுவனங்கள் ஏற்கெனவே கடந்த சனிக்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரையில் வெளிநாட்டு பயணங்களிலிருந்து திரும்பிய ஊழியர்களை வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக்கொண்டதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அத்தகைய நிறுவனங்கள், கட்டாய விடுப்பில் இருக்க சொல்லப்படும் ஊழியர்களை அவர்களது ஆண்டு விடுப்பைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்வது உட்பட தற்போதைய நீக்குப்போக்கான வேலை முறைகளையும் விடுப்பு ஏற்பாடுகளையும் தொடர வேண்டும் என அமைச்சு கூறியது.
எனினும், அத்தகைய நடவடிக்கைகளை எடுக்காத நிறுவனங்கள், “வீட்டிலிருந்து வேலை சாத்தியமில்லை என்றால், ஊழியர்களுக்கு கூடுதலாக ஊதியத்துடன் கூட விடுப்பு வழங்க முதலாளிகள் ஊக்குவிக்கப்படுகின்றனர்,” என அமைச்சு சுட்டியது.
இந்த நிறுவனங்கள் கட்டாய விடுப்பு ஆதரவு திட்டத்தின் கீழ் அன்றாடம் $100 மானியத்துக்கு விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் கீழ் சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள், வேலை அனுமதி அட்டை (வொர்க் பஸ்) வைத்திருக்கும் ஊழியர்களுக்கு நிறுவனங்கள் மானியம் கோரலாம். பாதிக்கப்பட்ட வேலை அனுமதி அட்டை வைத்திருக்கும் ஊழியர்களின் தீர்வைத் தள்ளுபடி செய்யவும் கோரிக்கை விடுக்கலாம்.
கட்டாய விடுப்பு முடிந்ததும் பாதிக்கப்பட்ட ஒவ்வோர் ஊழியருக்கும் தகுதியுள்ள முதலாளிகள் தினசரி நிதி ஆதரவுக்கு விண்ணப்பிக்க முடியும். எனினும், கட்டாய விடுப்பு காலத்தில் வெளிநாடுகளில் பணிபுரிந்திருந்தால் அல்லது பாதிக்கப்பட்ட ஊழியர் தனது சொந்த வருடாந்திர விடுப்பு, குழந்தை பராமரிப்பு விடுப்பு அல்லது வேறு ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்த நேர்ந்தால் முதலாளிகள், சுயதொழில் செய்பவர்கள், நிரந்தரவாசிகள் ஆகியோர் ஆதரவு திட்டத்தின் கீழ் இழப்பீட்டுத் தொகையைக் கோர முடியாது.