தகவல்தொடர்பு தொழில்நுட்பம், துப்புரவு, தளவாடங்கள், பொதுத்துறை போன்ற பிரிவுகளில் SGUnited Jobs முயற்சியின் வழியாக 10,000 வேலைகள் உருவாக்கப்படுகின்றன.
இன்னும் வேலைக்கு ஆளெடுக்கும் துறைகளில் பாதுகாப்பு, துப்புரவு, தகவல்தொடர்பு தொழில்நுட்பம், உற்பத்தி, பொறியியல் ஆகிய பிரிவுகளும் அடங்கும் என சிங்கப்பூர் வர்த்தக சம்மேளனத்தின் தலைமை நிர்வாகி ஹோ மெங் கிட் கூறினார்.
“அனைத்துலக அளவில் நாடுகளில் பயணக் கட்டுப்பாடுகள் நடப்புக்கு வந்துள்ள நிலையில், இந்தத் துறைகளில் தற்காலிக, நிரந்தர பணிகள் குறிப்பிடத்தக்க அளவுக்கு இருக்கும்,” என்றார் அவர்.
இந்த ஆள்சேர்ப்பு முயற்சியை கடந்த வியாழக்கிழமை துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் நாடாளுமன்றத்தில் அறிவித்தபொது, அத்தியாவசியப் பணிகளுக்கு நீண்ட காலத்துக்கு ஆள்சேர்ப்பதுடன் கொவிட்-19 தொடர்பிலான பணிகளுக்கு தற்காலிகமாக ஆள் சேர்க்கப்படும் என்றார். மேலும், இத்தகைய நடவடிக்கையில் பொதுத்துறை செயல்பாடுகளை முன்னெடுத்து விரைவு படுத்தும் என்றார் அவர்.
விரைவில் பணிக்குத் திரும்ப வேண்டிய தேவையில் இருப்போருக்கு உதவ இந்தப் பணிகள் உடனடியாக தேவைப்படும் என்று மனிதவள அமைச்சர் ஜோசபின் டியோ நேற்று (மார்ச் 27) தெரிவித்தார்.
அத்தகைய 3,000 பணிகள் நேற்று SGUnitedJobs.gov.sg என்ற இணையப்பக்கத்தின் மெய்நிகர் வேலைவாய்ப்பு சந்தையில் பட்டியலிடப்பட்டிருந்தன.
நேற்று மாலை 4 மணி நிலவரப்படி, அந்த வேலைகளுக்கு சுமார் 1,500 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக சிங்கப்பூர் ஊழியரணி முகவையான WSGன் பேச்சாளர் தெரிவித்தார்.
வாடிக்கையாளர் சேவை உதவியாளர்கள், சமுதாய சேவை அதிகாரிகள், தற்காலிக ஆசிரியர்கள், அவசர சிகிச்சை வாகன ஓட்டுநர்கள் போன்ற பணிகளுக்கு ஆட்கள் தேவைப்படுகின்றனர்.
80% தற்காலிக வேலைகள் ஓராண்டு வரையிலான காலகட்டத்துக்கானவை என்றார் திருவாட்டி டியோ. மாதாந்திர சம்பளம் $1,700 முதல் $5,800 வரை இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
#சிங்கப்பூர் #10,000 வேலைகள்