சிங்கப்பூர் முஸ்லிம்களுக்காக புனித ரமலான் மாதம் குறித்த வழிகாட்டி நூல் ஒன்று அறிமுகம் கண்டுள்ளது.
கொரோனா கிருமித்தொற்றைத் தவிர்க்கும் அதே வேளையில், சமய நடைமுறைகளைக் கடைப்பிடிக்க உதவுவது தொடர்பிலான வழிகாட்டுதல்கள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.
சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் (முயிஸ்) இந்த நூலை வெளியிட்டுள்ளது.
கொரோனா கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, இங்குள்ள வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் மே 4ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளன. சமூக ஒன்றுகூடல்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம்கள் நோன்பு நோற்கும் ரமலான் மாதம் இம்மாதம் 24ஆம் தேதி தொடங்குகிறது.
மே 23ஆம் தேதி வரை முஸ்லிம்கள் நோன்பு வைப்பர். மே 24ஆம் தேதி நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட இருக்கிறது.
கிருமித்தொற்றை முறியடிப்பதற்கான திட்டம், ரமலான் மாதத்தின் ஒரு பகுதியில் இடம்பெறுவதால், முஸ்லிம்கள் வீட்டில் இருந்தவாறு சமய நடைமுறைகளைக் கடைப்பிடிக்க இந்த வழிகாட்டி நூல் உதவும்.
சமயம் தொடர்பாக முஸ்லிம் சமூகம் எழுப்பியுள்ள பல கேள்விகளுக்கு இந்த நூல் பதிலளிக்கிறது. எடுத்துக்காட்டாக, வீட்டில் இருந்தபடி ‘தராவிஹ்’ எனப்படும் சிறப்புத் தொழுகையை முஸ்லிம்கள் மேற்கொள்வது எப்படி என்பது குறித்து இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது.
ரமலான் மாதத்தில் இரவு நேரத்தில் பள்ளிவாசல்களில் ‘தராவிஹ்’ தொழுகை மேற்கொள்ளப்படுகிறது.
முயிஸ் இணையத்தளத்தில் இந்த வழிகாட்டி நூல் மலாய் மொழியில் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு சில நாட்களில் அதன் ஆங்கில வடிவம் வெளியிடப்படும் என முயிஸ் கூறியிருக்கிறது.
இதற்கிடையே, கேலாங் சிராய் பகுதியில் ரமலான் மாத ஒளியூட்டு விழா ஒத்திவைக்கப்படுவதாக மக்கள் கழகம் நேற்று முன்தினம் தெரிவித்தது.
“கொவிட்-19 நிலவரத்தை நாங்கள் அணுக்கமாகக் கண்காணித்து வருகிறோம். ஒளியூட்டு விழாவைத் தொடங்குவது குறித்த தேதி பின்னர் அறிவிக்கப்படும்,” என்று மக்கள் கழகம் கூறியுள்ளது.
ரமலான் மாதத்தின்போது கேலாங் சிராயில் இடம்பெறும் பிரபல நோன்புச் சந்தை இம்முறை இடம்பெறாது என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.