கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களில் ஒருவர், முஸ்தஃபா சென்டர் கிருமித் தொற்று குழுமத்துடன் தொடர்புடையவர் என்று அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவருக்கு வயது 73, சென்ற புதன்கிழமை அன்று கொவிட்-19 கிருமியால் அவர் உயிரிழந்தார்.
கடந்த மாதம் 7ஆம் தேதி அவர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பபட்டது. இதையடுத்து சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் முதியவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
ஏற்கெனவே நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், ரத்தக் கொழுப்பு போன்ற நாட்பட்ட நோயால் பாதிக்கப்பட்டிருந்ததால் அவரால் கொேரானா கிருமி பாதிப்பிலிருந்து மீண்டு வர முடியவில்லை.
கொரோனாவுக்குப் பலியான மற்றொருவர், 97 வயது மாது. லீ ஆ மோய் முதியோர் பராமரிப்பு இல்லத்தில் உருவான கிருமித் தொற்று குழுமத்துடன் தொடர்புடையவர்.
இவருக்கும் உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை இருந்தது.
இந்த நிலையில் ஏப்ரல் 7ஆம் தேதி அவருக்கு கிருமித் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இருந்தாலும் செவ்வாய் இரவு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் உயிரிழந்தார். இருவரும் சிங்கப்பூரர்கள்.
இவர்களையும் சேர்த்து சிங்கப்பூரில் கிருமித்தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை புதன்கிழமையன்று 20ஐத் தொட்டது.
இதற்கிடையே துயரத்தில் உள்ள இறந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தேவையான உதவிகளை தேசிய தொற்றுநோய் நிலையமும் சிங்கப்பூர் பொது மருத்துவமனையும் செய்துவருகின்றன.
புதிதாக கிருமி தொற்றியவர்களில் பெரும்பாலனோர் தங்கும் விடுதிகளைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர்கள் ஆவர்.
புதன்கிழமை மொத்தம் 788 புதிய சம்பவங்கள் பதிவாகின. இவற்றில் 759 அல்லது 96% விழுக்காட்டினர் வெளிநாட்டு ஊழியர்கள். சிங்கப்பூரில் புதன்கிழமை நிலவரப்படி கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,000யும் தாண்டியது என்று அமைச்சு குறிப்பிட்டது.