முயிஸ் எனப்படும் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றமும் பள்ளிவாசல்களும் இங்குள்ள வெளிநாட்டு ஊழியர்களான சுமார் 300 முஸ்லிம்களுக்கு இந்த நோன்பு காலத்தில் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளன. கியான் டெக் டிரைவ் தங்கும் விடுதியைச் சேர்ந்த அந்த ஊழியர்கள் தொழுகை நடத்துவதற்கான தரைவிரிப்புகள், பேரீச்சம்பழம், பால் போன்ற ரமலான் பராமரிப்புப் பொருட்களைப் பெற்றனர்.
சிங்கப்பூர் முழுவதும் உள்ள மற்ற தங்கும் விடுதிகளிலும் உள்ள வெளிநாட்டு முஸ்லிம் ஊழியர்களுக்காக 3,500 தரைவிரிப்புகள் கடந்த வியாழக்கிழமை முதல் வழங்கப்பட்டன. உள்ளூர் பள்ளிவாசல்களும் பொதுமக்களும் நன்கொடையாக வழங்கியவை இந்த விரிப்புகள். நோன்பு மாதத்தின் கடைசி பத்து நாட்களில் சுமார் 1,200 ஊழியர்களுக்கு நோன்பு துறக்கும் உணவு வழங்கவும் முயிஸ் ஏற்பாடு செய்து வருகிறது. இதற்காக இரு அமைப்புகளுடன் அது பங்காளித்துவம் செய்துள்ளது. மேலும் 5 நாட்களுக்கு அவர் களுக்கு நோன்பு துறப்பு உணவு அளிக்க தனது அடையாளத்தைக் குறிப்பிடாத ஒருவர் 40,000 வெள்ளி நன்கொடையாக அளித்திருப்பதாக முயிஸ் தெரிவித்து உள்ளது.
அதன் மூலம் நோன்பு மாதத்தின் இறுதி 15 நாட்களுக்கு அந்த ஊழியர்களுக்கு உணவு கிடைக்கும். வெளிநாட்டு முஸ்லிம் ஊழியர்கள் இங்குள்ள பள்ளிவாசல்களில் தொண்டூழியம் செய்து முக்கிய பங்கு வகிக்கிறார்கள். அவர்களின் அந்தப் பணிக்குப் பாராட்டு தெரிவிக்கும் வகையிலும் ஆதரவும் உதவியும் வழங்கப்படுவதாக முயிஸ் குறிப்பிட்டு உள்ளது.