சிங்கப்பூர் உச்ச நீதிமன்றத்திற்கு வழக்கு ஒன்றின் தொடர்பாக மார்ச் 31, ஏப்ரல்1 ஆகிய தேதிகளில் சென்ற இந்திய ஆடவர் தமது வெளிநாட்டுப் பயணம் பற்றி உண்மையில்லாத தகவலை அளித்ததற்காக இன்று (மே 13) அவர் மீது மாவட்ட நீதிமன்றத்தில் 2 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
பொதுத்துறை ஊழியரிடம் பொய்யான தகவலை அளித்ததாக 47 வயது கிரி மனிஷ் பிரவின்சந்திரா மீது 2 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
அமெரிக்காவிலிருந்து கடந்த மார்ச் மாதம் 20ஆம் தேதி சிங்கப்பூருக்கு வந்தார் கிரி.
ஆனால், மார்ச் 31, ஏப்ரல்1 ஆகிய தேதிகளில் உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றபோது அங்கு பார்வையாளர்கள், முந்தைய 14 நாட்களுக்கான தங்களது பயணத் தகவல்களை அளிக்க வேண்டிய சூழலில் அவர், பொய்யான தகவலை அளித்தார். அந்தத் தேதிகளுக்கு முந்தைய 14 நாட்களுக்குள் வெளிநாடுகளிலிருந்து திரும்பவில்லை என்று அவர் அறிவித்ததையடுத்து, அவர் அந்த வளாகத்துக்குள் அனுமதிக்கப்பட்டார்.
பயணம், சுகாதாரம் தொடர்பான அறிவிப்புகளைக் கடுமையாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்ட குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம், சிங்கப்பூர் போலிஸ் படை ஆகியவற்றின் கூட்டறிக்கையில், எப்போதும் உண்மையான துல்லியமான தகவல்களையே அளிக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு நினைவுறுத்தப்பட்டது. பொய்யான தகவல்கள் அளிப்பவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
பொதுத்துறை ஊழியரிடம் பொய்யான தகவல் அளித்த ஒவ்வொரு சம்பவத்துக்கும் ஈராண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம் ஆகியன விதிக்கப்படலாம்.
கிரி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவர் தண்டனையை நிறைவு செய்தபிறகு சிங்கப்பூரிலிருந்து வெளியேற்றப்படுவதுடன் அவர் சிங்கப்பூருக்கு மீண்டும் வருவது தடை செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கிரி அடுத்த மாதம் 24ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாவார்.