இதற்குமுன் இல்லாத வகையில் பெரும் எண்ணிக்கையில் வேலை, பயிற்சி வாய்ப்புகளை உருவாக்க புதிய தேசிய வேலைகள் மன்றம் வரும் மாதங்களில் பணியாற்றும் என்று அதன் தலைவரும் மூத்த அமைச்சருமான தர்மன் சண்முகரத்னம் தெரிவித்துள்ளார்.
உயர்மட்ட அளவிலான இந்த மன்றத்தில் அமைச்சர்கள் எட்டுப் பேர், தொழிற்சங்கம், வர்த்தகச் சங்கங்களின் பேராளர்கள் என 17 உறுப்பினர்கள் இருக்கின்றனர்.
கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் வலிமைக்கான வரவுசெலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது அறிவிக்கப்பட்ட ‘எஸ்ஜி ஒற்றுமை வேலைகள், திறன்கள் தொகுப்பு’ வடிவமைப்பையும் நடைமுறைப்படுத்துவதையும் இந்த மன்றம் மேற்பார்வையிடும்.
புதிய வேலைகள், வேலைப் பயிற்சி மற்றும் திறன் பயிற்சி வாய்ப்புகளை உருவாக்கி, வேலை தேடுவோர் கிட்டத்தட்ட 100,000 பேருக்கு அடுத்த ஓராண்டில் ஆதரவு வழங்க அந்தத் தொகுப்பு இலக்கு கொண்டுள்ளது.
“கடந்த காலங்களில் கண்டு இராத வகையில், மிகப் பெரிய அளவில் வேலை வாய்ப்புகளையும் வேலைப் பயிற்சி வாய்ப்புகளையும் உருவாக்க ஒரு தேசிய குழுவாக நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்,” என்று திரு தர்மன் வலியுறுத்தி இருக்கிறார்.
“இது ஒரு சவாலான பணிதான். ஆனாலும் அணுக்கமான ஒத்துழைப்பு மூலம் இதைச் சாதிக்க முடியும். பொதுத் துறையிலும் தனியார் துறையிலும் சாத்தியமுள்ள ஒவ்வொரு வழியையும் பயன்படுத்தி இந்த வாய்ப்புகளை உருவாக்க முயல்வோம். குறிப்பாக, நடுத்தர வயது, முதிய ஊழியர்கள் மீது சிறப்புக் கவனம் செலுத்தப்படும்,” என்று மூத்த அமைச்சர் தர்மன் கூறியுள்ளார்.
தேசிய வேலைகள் மன்றம் முதன்முறையாக நேற்று கூடியது. கொவிட்-19 கிருமித்தொற்றுச் சூழலிலும் அதற்குப் பின்னரும் சிங்கப்பூரர்களுக்கான வேலை வாய்ப்புகளை அடையாளம் கண்டு, அவற்றை உருவாக்குவது தனது மூன்று முன்னுரிமைகளில் ஒன்று என அம்மன்றம் குறிப்பிட்டது.
பல்வேறு துறைகளிலும் ஒவ்வொரு தேர்ச்சிநிலைக்கு ஏற்றவாறும் ‘எஸ்ஜி ஒற்றுமை வேலைகள், திறன்கள்’ தொகுப்பு மூலம் கணிசமான வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் அரசாங்கம், முதலாளிகள், தொழிற்சங்கங்கள் ஆகிய முத்தரப்புப் பங்காளிகளுடன் பயிற்சி வழங்குநர்களை ஒன்றுதிரட்டும் பணியையும் மன்றம் மேற்கொள்ளும்.
இறுதியாக, பங்காளிகளுக்கு இடையிலான முயற்சிகளை ஒருங்கிணைத்து, மூன்று வகைத் திட்டங்களையும் செயல்திறமிக்க வகையில் அமல்படுத்தும். வேலை உருவாக்கமும் திறமைக்கேற்ப பணியமர்த்துதலும், மறுதேர்ச்சிக்கான இணைப்புத் திட்டங்களும் பயிற்சியும், வேலை மறுவடிவமைப்பு மூலம் நிறுவனங்கள் உருமாற உதவி ஆகியவையே அந்த மூன்று திட்டங்கள்.
தேசிய வேலைகள் மன்றம், எதிர்காலப் பொருளியல் மன்றம், வளர்ந்து வரும் வலுவான ஊழியரணி ஆகிய அமைப்புகளின் பணிகளும் நடைமுறைப்படுத்தும் உத்திகளும் ஒன்றுக்கொன்று ஆதரவாக இருக்கும்படி ஒழுங்குபடுத்தப்படும்.
துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான திரு ஹெங் சுவீ கியட் மன்றத்திற்கு ஆலோசனை வழங்குவார்.
முதலாளிகளுடனும் அரசாங்கத்துடனும் அணுக்கமாக ஒத்துழைக்க கடப்பாடு கொண்டுள்ளோம் என்ற என்டியுசி தலைமைச் செயலாளர் திரு இங் சீ மெங், வேலை தொடர்பான ‘முழு தேச அணுகுமுறை’க்கு முடிந்த அளவு சிறப்பான ஆதரவு வழங்குவோம் என்றும் சொன்னார்.
இப்போதைய சூழலிலும் நீண்டகால அடிப்படையிலும் தங்களது வாழ்வாதாரங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் இப்போது பணியில் இருப்பவர்களும் இனி வரவிருக்கும் புதிய ஊழியர்களும் தங்களது திறன்களை மேம்படுத்திக்கொள்ள வாய்ப்புகள் வழங்குவது குறித்து தேசிய முதலாளிகள் சங்கத்தின் உறுப்பினர்கள் ஆராய்வர் என்று அதன் தலைவர் திரு ராபர்ட் யாப் தெரிவித்தார்.
மின்னிலக்க உருமாற்றத்திற்கான அவசரத் தேவை ஏற்பட்டுள்ளதை கொவிட்-19 கோடிட்டுக் காட்டியுள்ளதாக சிங்கப்பூர் கணினிச் சங்கத்தின் தலைவர் திருவாட்டி சொங் யோக் குறிப்பிட்டார்.