மெக்பர்சன் தனித் தொகுதியில் உள்ள 100 குறைந்த வருமானக் குடும்பங்கள், ஓராண்டு காலத்திற்குப் பாதி மின்சாரக் கட்டணத்தைக் கட்டுவர். கட்டணத்தின் பாதியை ‘சன்சியாப் எனர்ஜி’ எனும் எரிசக்தி விற்பனை நிறுவனம் ஏற்கும் என்று இன்று அறிவிக்கப்பட்டது.
சன்சியாப் குழுமத்துடன் மக்கள் செயல் கட்சியின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் டின் பெய் லிங் இணைந்து இத்திட்டத்தை இவ்வாண்டின் பிற்பாதியில் அறிமுகப்படுத்தவுள்ளார். மற்ற உள்நாட்டு நிறுவனங்களும் சமூகத்திற்குத் தங்கள் பங்கை ஆற்ற முன்வருவதற்கு இதுபோன்ற பங்காளித்துவத் திட்டம் தூண்டுதலாக இருக்க வேண்டும் என்று மசெகவின் மெக்பர்சன் கிளை நேற்று வெளியிட்ட அறிக்கையில் நம்பிக்கை தெரிவித்தது.
சன்சியாப் மற்றும் அதே சிந்தனையுடைய வேறு நிறுவனங்களுடன் இணைந்து குடியிருப்பு வட்டாரத்தில் அறிவார்ந்த தீர்வுகளைச் சோதனை செய்வதுடன் அமல்படுத்தவும் திட்டம் உள்ளதாக மெக்பர்சன் கிளை தெரிவித்தது. குடியிருப்பாளர்களும் நகர மன்ற மேலாளர்களும் தங்களின் எரிசக்தி பயன்பாட்டை மேலும் திறம்பட நிர்வகிக்கவும் கட்டணச் செலவுகளைக் குறைக்கவும் இத்தீர்வுகள் உதவும்.
குடியிருப்பாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்வது, தொழில்நுட்பப் பயன்பாட்டில் சிறாருக்கும் பெரியோருக்கும் ஆதரவு அளிப்பது போன்றவற்றின் தொடர்பிலும் ஆலோசித்து வருவதாக மசெக மெக்பர்சன் கிளை தெரிவித்தது.