இர்ஷாத் முஹம்மது
இஸ்லாமிய சமயம் குறித்த செய்திகள், நிகழ்ச்சிகளை நடத்துவதுடன் பிற சமயத்தவர்களும் இஸ்லாமிய சமயத்தைப் பற்றி அறிந்துகொண்டு நல்லிணக்கத்தை மேம்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தில் உதயமானது ‘பிஸ்மி இஸ்லாமிய வானொலி’.
இன்று புனித ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு அந்த இணைய வானொலியில் இஸ்லாமிய சமய சொற்பொழிவு இடம்பெறுகிறது.
கொவிட்-19 கிருமித் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் சிங்கப்பூரின் இஸ்லாமிய சமய மன்றம் இணையம் வழி பெருநாள் பிரசங்கம் செய்கிறது. அதன் தமிழ் உரை பல இந்திய முஸ்லிம் பள்ளிவாசல்களின் இணையத்தளங்களிலும், சமூக ஊடகங்களிலும் பிஸ்மி இஸ்லாமிய வானொலியிலும் ஒலிபரப்பப்படுகிறது.
10 நேயர்களுடன் மூன்றாண்டு களுக்கு முன்னர் தொடங்கப்பட்ட இந்த இணைய வானொலி சேவை கடந்த மே மாதம் ரமலான் நோன்பு நேரத்தில் ஆக அதிகமாக 410,000 நேயர்களை ஈர்த்தது.
கடந்த சில மாதங்களாக, குறிப்பாக நோன்பு மாதத்தில், கொவிட்-19 கிருமித்தொற்று முறியடிப்புத் திட்டம் செயல்பாட்டில் இருந்ததால் மக்கள் அதிக எண்ணிக்கையில் இந்த வானொலிச் சேவையைப் பயன்படுத்தியுள்ளனர் என்று கூறினார் இச்சேவையின் நிறுவனரான பொருளியல் நிபுணர் சீனி ஜாஃபர் கனி.
நேயர்களில் 40% சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள் என்றும் 30% இந்தியா, மலேசியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் இதர 30% உலகின் மற்ற இடங்களிலும் இணைய வானொலி மூலம் இணைந்துள்ளனர் என்றும் கூறினார் அவர்.
“சிங்கப்பூரில் தமிழ் வானொலி உள்ளது. ஆனால் சமயம் சார்ந்த நிகழ்ச்சிகளை அவர்களால் அதிகமாக ஒலிபரப்ப இயலாது. அது கொள்கை ரீதியிலான முடிவு. அதனால் ஐந்தாண்டுகளுக்கு முன்னர் இந்தத் திட்டத்தை வரைந்தேன்,” என்றார் திரு கனி.
இஸ்லாமியர்கள் அல்லாதோரும் இந்தச் சேவையைக் கேட்பதை எண்ணி பெருமிதம் கொள்வதாகச் சொன்ன திரு கனி, கல்வி, சட்ட ஆலோனை, நிதி நிர்வாகம், மருத்துவம், சுகாதாரப் பராமரிப்பு போன்ற துறைகளைச் சேர்ந்த நிபுணர்களைக்கொண்டு நிகழ்ச்சிகளை நடத்தவிருப்பதாக கூறினார்.