தமது மனைவி மீது மின்ஸ்கூட்டரை மோதியதற்கு இழப்பீடாக $445,000 வழங்க உத்தரவிடப்பட்டிருந்தாலும், அந்தப் பணம் திரு லியோங் லூன் வாவின் கைக்கு வந்து சேரும் என்பதில் உத்தரவாதம் இல்லை.
இந்த விபத்திற்குக் காரணமான மின்ஸ்கூட்டர் ஓட்டுநர், நிக்கலஸ் திங் நய் ஜியே எனும் 21 வயது தேசிய சேவையாளராவார். தம்மிடம் எந்தவொரு சொத்தும் காப்புறுதியும் இல்லாததால் இழப்பீட்டுத் தொகையைத் தம்மால் செலுத்த முடியவில்லை என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள இழப்பீட்டுத் தொகையைக் குறைக்க பேச்சுவார்த்தை நடத்துவது பற்றி திரு திங் பரிசீலிப்பாரா என்று அவரது வழக்கறிஞர் திரு எஸ்.செல்வராஜிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், இழப்பீட்டுத் தொகை பாதியாகக் குறைக்கப்பட்டாலும் தமது கட்சிக்காரரால் அதைச் செலுத்த இயலாது என்றார்.
“21 வயதிலேயே நொடித்துப் போனவர் என்பதை அறிவிப்பதில் எந்தவொரு அர்த்தமும் இல்லை. அவரிடம் சொத்தும் எதுவும் இல்லை. எதிர்காலத்தில் அவர் எவ்வளவு வருமானம் ஈட்டுவார் என்பதை எங்களால் கணிக்க முடியாது.
“ஒருவருக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கு முன்னர், அவரிடம் எவ்வளவு சொத்து, பணம் இருக்கிறது என்பதைக் கருத்தில்கொள்ள வேண்டும்,” என்று திரு செல்வராஜ் விளக்கினார்.
2016ஆம் ஆண்டு செப்டம்பரில் பாசிர் ரிஸ் டிரைவ் 1, பேருந்து நிறுத்தத்தில் இந்த மின்ஸ்கூட்டர் விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த திரு லியோங்கின் மனைவி 57 வயது ஆங் லியூ கியாவால் அதைத் தொடர்ந்து பேசவோ, படிக்கவோ, எழுதவோ முடியவில்லை. உணவருந்துவது, உடை அணிவது, கழிவறையைப் பயன்படுத்துவது போன்ற அன்றாட நடவடிக்கைகளில் அவருக்கு உதவி தேவைப்படுகிறது.
இந்த வழக்கில் திரு லியோங், திருவாட்டி ஆங் தம்பதியை வழக்கறிஞர் பெனடிக்ட் டியோ பிரதிநிதிக்கிறார். அவர்களுக்கு திரு டியோ இலவசமாக சட்ட சேவை வழங்குகிறார். இத்தம்பதிக்கு 20, 26, 30 வயதில் மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
ஒப்பந்த ஊழியராக பணியாற்றும் திரு லியோங், மாதச் சம்பளமாக $2,000 முதல் $3,000 வரை ஈட்டுகிறார். திருவாட்டி ஆங்கின் மருத்துவக் கட்டணங்களுக்காக இதுவரை $60,000க்கும் மேல் செலவானதாக சண்டே டைம்ஸ் நாளிதழிடம் திரு லியோங் கூறினார். இல்லப் பணிப்பெண் ஒருவரைப் பணியில் அமர்த்தியதும் அத்தம்பதிக்கு நிதிச் சுமையைக் கூட்டியது.
“எனது மனைவிக்கு ஏற்பட்டிற்கும் உடற்குறை நிரந்தரமானது என மருத்துவர்கள் மதிப்பிட்டுள்ளனர்,” என்றார் திரு லியோங், 57.
திரு திங்கிடமிருந்து இழப்பீடைப் பெறுவதில் திரு லியோங் முயற்சியை விட்டுக்கொடுப்பதாக இல்லை. மற்ற சட்ட நடவடிக்கைகளையும் தாம் ஆராயப்போவதாக அவர் தெரிவித்தார். திரு திங்கின் சொத்துகளைக் கண்டறிவது அல்லது நொடித்தவர் என அவரை அறிவிக்கக் கோருவது அந்தச் சட்ட நடவடிக்கைகளில் அடங்கும்.