சிங்கப்பூரில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ஒருவரின் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறுவதாக நேற்று (ஆகஸ்ட் 3) சுகாதார அமைச்சு தெரிவித்தது.
கடந்த ஜூலை 13ஆம் தேதிக்குப் பிறகு கொரோனா தொற்று காரணமாக யாரும் அவசர சிகிச்சைப் பிரிவில் இல்லாத நிலையில் நேற்று ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரைத் தவிர மேலும் 114 கொவிட்-19 நோயாளிகள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சமூகப் பராமரிப்பு நிலையங்களில் 5,730 பேர் குணமடைந்து வருகின்றனர். இதுவரை 47,164 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட 226 பேரில் ஒருவர் இலங்கையிலிருந்து குறுகிய கால விசாவில் இங்கு வந்தவர். அவர் சாங்கி சிறை வளாகத்தில் ஜூலை 30 அன்று அனுமதிக்கப்பட்டார்.
சிறையில் அனுமதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டிருந்த 26 வயதான அந்த ஆடவர், இதற்கு முன்பு சிறையில் அனுமதிக்கப்பட்டபோது ஜூலை 2, 22 தேதிகளில் அவருக்கு கிருமித்தொற்று பரிசோதனைகள் செய்யப்பட்டன. அப்போது அவருக்கு கிருமித்தொற்று இல்லை.