எது முகக்கவசம் ஆகும், அதை எவ்வாறு அணிய வேண்டும் என்பன தொடர்பிலான கடும் கட்டுப்பாடுகள் நேற்று முதல் நடப்பிற்கு வந்தன.
பந்தனா, கழுத்துத் துண்டு, கழுத்துறை போன்றவைகளைக் கொண்டு தற்காலிக முக மறைப்பான்களை முகக்கவசமாகப் பயன்படுத்தக்கூடாது என்று சுகாதார அமைச்சு மீண்டும் வலியுறுத்திக் கூறியுள்ளது.
தொற்று அல்லது காற்று மாசில் இருந்து பாதுகாக்கும் நோக்கில், பிரத்தியேகமாக மூக்கு மற்றும் வாய் மீது அணியும் வகையில் வடிவமைக்கப்பட்டு, காகிதம், நெகிழி அல்லது துணி ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மறைப்பான் என முக்கவசத்திற்கான வரையறை திருத்தப்பட்டிருக்கிறது.
அண்மையில் 15 வகை முகக்கவசங்களை ஆய்வு செய்த அமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழகம், முகக்கவசம் அணியாமல் இருப்பதைவிட ஓரடுக்கு கழுத்துறையை அணிவது மோசமான விளைவை ஏற்படுத்தும் எனத் தெரிவித்தது.
இந்நிலையில், முகக்கவசம் அதை அணிபவரின் மூக்கு, கன்னங்கள், தாடை ஆகியவற்றைத் தொட்டுக்கொண்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, முகக்கவசம் அதை அணிபவரின் மூக்கையும் கன்னங்களையும் தொட்டுக்கொண்டிருந்தால் போதுமானதாக இருந்தது.
“முகக்கவசத்திற்கும் முகத்திற்கும் இடையே இடைவெளி இராதபடி, அணிபவரின் மூக்கையும் வாயையும் ஒட்டியவாறும் அவற்றை முழுமையாக மறைக்கும்படியும் முகக்கவசம் அணியப்பட வேண்டும்,” என்று அமைச்சு தெரிவித்து இருக்கிறது.
எது முகக்கவசம் என்பதை மிகத் தெளிவாகவும் தீர்க்கமாகவும் குறிப்பிடும் வகையில் ஒழுங்குமுறை விதிகள் திருத்தப்பட்டுள்ளன என்று மூத்த குற்றவியல் வழக்கறிஞர் ராஜன் சுப்பிரமணியம் கருத்துரைத்தார்.
அண்மையில் பேருந்து ஓட்டுநர் ஒருவர், கழுத்துறை அணிந்து வந்த ஒருவரைப் பேருந்துக்குள் அனுமதிக்க அறுத்த நிலையில், கொவிட்-19 (தற்காலிக நடவடிக்கைகள்) சட்டத்தின்கீழ் ஒழுங்குமுறை விதிகள் இவ்வாறு திருத்தப்பட்டுள்ளன.
முகக்கவசம் அணியாமல் பிடிவோருக்கு $300 அபராதம் விதிக்கப்படும் என ஒழுங்குமுறை விதிகள் கூறுகின்றன.