வெவ்வேறு இன அடிப்படையிலான கொள்கைகளுக்கு வெளிப்படையான மறுஆய்வு தேவை என அல்ஜுனிட் குழுத்தொகுதி உறுப்பினரும் பாட்டாளிக் கட்சித் தலைவருமான சில்வியா லிம் கேட்டுக்கொண்டார்.
சீனர், மலாய்க்காரர், இந்தியர் மற்றும் பிறர் (CMIO) என இன வகைப்படுத்தல் முறையிலான கொள்கையும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் இன ஒருங்கிணைப்புக் கொள்கையும் அவர் கோரிக்கை விடுத்த அம்சங்களில் அடங்கும்.
மன்றத்தில் நேற்று அதிபர் உரை மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய அவர், இனபேதமற்ற சமூகம் என்பதை நோக்கிய சிங்கப்பூரின் பயணத்துக்கு ஆறு அம்சங்கள் மறுஆய்வு செய்யப்பட வேண்டும் என அவர் பரிந்துரைத்தார்.
“மறுஆய்வு மூன்று விரிவான அம்சங்களின் அடிப்படையில் அமைய வேண்டும். பொருத்தமான நிபுணத்துவத்துடன் கல்வியை உள்ளடக்குவதோடு குடிமக்களின் வெவ்வேறு வயதுப் பிரிவினருக்கும் நியாயமான பிரதிநிதித்துவம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
“நமது இப்போதை பல இன உணர்வு எந்த அளவில் இருக்கிறது என்பதைவும் இனபேதமற்ற சமூகம் என்னும் பயணத்திற்காக நாம் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதையும் விரிவான முறையில் பிரதிபலிப்பதை மறுஆய்வு நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும்,” என்றார் திருவாட்டி லிம்.
1824ஆம் ஆண்டு காலனித்துவ காலத்தில் இன வகைப்படுத்தல் முறையை சிங்கப்பூர் முதன்முதலாகப் பயன்படுத்தியது என அவர் குறிப்பிட்டார்.
கலப்பு மணம் புரிந்தோருக்குப் பிறக்கும் குழந்தைகள் இரட்டை இனத்தின் அடிப்படையில் பதிவு செய்வதால் அத்தகைய திருமணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை அரசாங்கம் அங்கீகரித்து உள்ளதாக திருவாட்டி லிம் குறிப்பிட்டார்.
“சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்க இன வகைப்படுத்தல் முறை அவசியம் என்ற அளவில் அரசாங்கம் அதனைத் தற்காத்தபோதிலும் சிறுபான்மையினர் உரிமை என்பது சிக்கலான அம்சம் என்பதால் அது குடிமக்களின் உரிமை என விவாதிக்கப்பட வேண்டும்.
“வெவ்வேறு இனத்தைச் சேர்ந்த கலப்பு மணத் தம்பதியினருக்குப் பிறந்தவர்களும் கலப்பு மணம் புரியும் போக்கு அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் இன வகைப்படுத்துதல் என்பது வருங்காலத்தில் எந்த அளவுக்கு தாக்குப்பிடிக்கும் என்பதை வியப்புடன் பார்க்கிறேன்,” என்றார் அவர்.
மேலும் அவர் பேசுகையில், “இனங்கள் பற்றிய விரிவான தகவல்களை சேகரிக்கும் அரசாங்கம், அவற்றில் எதனை பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கிறது. அதற்குக் காரணங்கள் இருக்கலாம்.
“ஆயினும் குறிப்பிட்ட சில சமூகங்களைப் பாதிக்கும் விவகாரங்கள் குறித்து புரிந்துகொள்ள இனங் கள் மீதான தகவல்கள் தேவைப்படுகின்றன,” என்றார் திருவாட்டி லிம்.
சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் இனவாரியான எண்ணிக்கையைக் கேட்டு தாம் நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றை தாக்கல் செய்திருந்ததாக நினைவுகூர்ந்த அவர், அது தொடர்பான புள்ளிவிவரங்களை சிறைத்துறை பகிர்ந்துகொள்ள இயலாது என்று தமக்கு பதில் வந்ததாகவும் அதற்குரிய விளக்கம் தரப்படவில்லை என்றும் கூறினார்.