தேசிய தொற்றுநோய்த் தடுப்பு நிலையத்தில் கொவிட்-19 பரிசோதனையின்போது நெஞ்சுப் பகுதியில் வழக்கத்திற்கு மாறான ஊடுகதிர் ஒளிப்படத்தை விரைவில் கண்டுபிடிக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடனான கருவி ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக, வழக்கத்திற்கு மாறான ஊடுகதிர் ஒளிப்படம் மூலம் நுரையீரல் தொற்றை உறுதி செய்ய முடியும்.
நிமோனியா சம்பவங்கள் அதிகரித்துவரும் வேளையில், இந்தப் புதிய கண்டுபிடிப்பின் மூலம் நோயாளிகளுக்கு பிராணவாயு அளிக்கும் சிகிச்சையையும் அவர்களுக்கு செயற்கை சுவாசக் கருவியைப் பொருத்துவதற்கான தேவை குறித்தும் மருத்துவர்கள் முடிவெடுக்க முடியும்.
நிமோனியா அறிகுறிகள் உடையோருக்கு கொவிட்-19 நோய் இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும்.
கொவிட்-19 நோய் உடையவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் தேசிய தொற்றுநோய்த் தடுப்பு நிலையத்தில்தான் அனுமதிக்கப்பட்டனர்.
கொவிட்-19 இருப்பதாக சந்தேகிக்கப்படுவோர் அல்லது மூச்சுப் பிரச்சினைக்கான அறிகுறிகள் உடையோர், நெஞ்சுப் பகுதியில் ஊடுகதிர் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். முன்னதாக, ஒவ்வோர் ஊடுகதிர் ஒளிப்படத்தையும் கதிரியக்க மருத்துவர் ஒரு மணி நேரத்திற்குள் ஆராய்ந்து முடிப்பார். பல ஊடுகதிர் ஒளிப்படங்களையும் ஆராய நேரம் எடுத்தது.
கொரோனா கிருமிப் பரவல் உச்சத்தில் இருந்த ஏப்ரல் மாதத்தில், தேசிய தொற்றுநோய்த் தடுப்பு நிலையத்தின் பரிசோதனை மையத்தில் தினந்தோறும் 200 முதல் 300 ஊடுகதிர் ஒளிப்படங்கள் ஆராயப்பட்டன. தற்போது அந்த எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு சுமார் 100ஆக உள்ளது.
இந்நிலையில், ‘ரேடிலாஜிக்’ என்று அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவுக் கருவி, ஒவ்வொரு ஊடுகதிர் ஒளிப்படத்தையும் மூன்றே வினாடிகளுக்குள் ஆராயக்கூடிய ஆற்றல் கொண்டது. வழக்கத்திற்கு மாறான ஊடுகதிர் ஒளிப்படங்களைக் கணினியில் உடனுக்குடன் தெரிவிக்கும் ஆற்றலையும் அது கொண்டுள்ளது.
இதனால், வழக்கத்தைவிட 20 விழுக்காடு குறைவான நேரத்தில் ஊடுகதிர் பரிசோதனை முடிவுகள் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவ ஊழியர்களிடம் கதிரியக்க மருத்துவர்கள் தெரியப்படுத்த முடியும்.
அந்தச் செயற்கை நுண்ணறிவுக் கருவி 96.1 விழுக்காடு துல்லியமாக உள்ளது. கடந்த மே மாதம் முதல் தேசிய தொற்றுநோய்த் தடுப்பு நிலையத்தின் பரிசோதனை மையத்தில் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சிங்கப்பூரில் ஊடுகதிர் ஒளிப்படப் பரிசோதனைகள் மூலம் கொவிட்-19 நோயைக் கண்டறிவதற்காக பயன்படுத்தப்படும் முதல் செயற்கை நுண்ணறிவுக் கருவி இது என்று அதைத் தயாரித்துள்ள மருத்துவக் குழு கூறுகிறது.