செம்பவாங்கில் அமைந்துள்ள சீன குபேரர் (‘காட் ஆஃப் வெல்த்’) கோயிலில் நேற்றிரவு நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில், அங்கு வாழ்ந்து வந்த 7 நாய்களில் மூன்று தீக்கிரையாகின. ஆனால், அதிர்ஷ்டவசமாக, அந்த ஆலயத்தின் பிரதான வழிபாட்டு அறையில் இருக்கும் சிலைகள் எந்தச் சேதமுமின்றி முன்பிருந்ததுபோலவே இருக்கின்றன.
நேற்றிரவு தீயணைப்புப் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் 3 நாய்களின் கருகிய சடலங்களைக் கண்டுபிடித்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் பேச்சாளர் குறிப்பிட்டார்.
நேற்று இரவு 9.15 மணியிலிருந்து சுமார் மூன்று மணி நேரம் போராடி அதிகாரிகள் தீயை அணைத்தனர். தீ மீண்டும் பற்றுவதைத் தவிர்க்க, தீப்பற்றிய இடங்களில் பல மணி நேரத்துக்கு அவர்கள் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தனர்.
செம்பவாங் குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான திரு ஓங் யி காங், டாக்டர் லிம் வீ கியக் ஆகியோர் இன்று கோயிலைப் பார்வையிட்டனர்.
நேற்றைய பெருந்தீ காரணமாக பலத்த சேதம் இருந்தபோதும் வியக்கத்தக்க வகையில் சிலைகள் சற்றும் பாதிக்கப்படாமல் முன்பிருந்ததுபோலவே இருப்பதாக போக்குவரத்து அமைச்சருமான திரு ஓங் யி காங் தனது இன்ஸ்டகிராம் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
நான்கு மாடிகளைக் கொண்ட அந்த ஆலயத்தின் முதல், இரண்டாவது மாடிகளில் பெருத்த சேதம் ஏற்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய டாக்டர் லிம், சில புகைப்படங்களைத் தமது ஃபேஸ்புக் பதிவில் பகிர்ந்தார்.
தீயணைப்புப் பணியில் 12 வாகங்னகளும் 62 வீரர்களும் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.