பதவியைப் பயன்படுத்தி இரண்டு பெண்களைத் தம்முடன் பாலியல் உறவு கொள்ளச் செய்த போலிஸ் அதிகாரிக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வெவ்வேறு வழக்குகள் தொடர்பாக அந்த இரண்டு பெண்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில் தம்முடன் பாலியல் உறவு கொள்ளச் செய்தார் 32 வயது மகேந்திரன் செல்வராஜு.
தம்மீது சுமத்தப்பட்ட இரண்டு ஊழல் குற்றச்சாட்டுகளையும் கணினியைத் தவறான காரியங்களுக்குப் பயன்படுத்தியது தொடர்பான இரண்டு குற்றச்சாட்டுகளையும் மகேந்திரன் ஒப்புக்கொண்டார்.
கடந்த பிப்ரவரி மாதம் அங் மோ கியோ ஸ்திரீட் 51 புளோக் 590ல் உள்ள அடுக்குமாடி வாகன நிறுத்துமிடத்தில் அந்த இரு பெண்களில் ஒருவருடன் அவர் தகாத செயலில் ஈடுபட்டார்.
இரண்டு மாதங்கள் கழித்து, சிராங்கூன் சென்ட்ரல் புளோக் 264ல் உள்ள அடுக்குமாடி வாகன நிறுத்துமிடத்தில் அந்த இன்னொரு பெண்ணுடன் மகேந்திரன் பாலியல் உறவு கொண்டார்.
கடந்த ஆண்டு மே மாதம் 15ஆம் தேதியிலிருந்து மகேந்திரன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களின் பெயர்களை வெளியிடக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மகேந்திரன் புரிந்த குற்றங்கள் வெளிச்சத்துக்கு வந்ததும் போலிசார் விசாரணை நடத்தினர். கடந்த ஆண்டு மே மாதம் 30ஆம் தேதியன்று இதுகுறித்து புகார் செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக ஊழல் தடுப்புப் புலனாய்வுத் துறையிடம் தெரிவிக்கப்பட்டது.
மகேந்திரன் செய்த குற்றச் செயல்கள் பற்றி தெரிய வந்ததும் அவர் அப்போது விசாரணை நடத்திக்கொண்டிருந்த வழக்குகளில் ஏதாவது குளறுபடி ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய போலிஸ் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அனைத்து ஆதாரங்களையும் அலசி ஆராய்ந்த பிறகு, மகேந்திரனனின் பொறுப்பின்கீழ் இருந்த விசாரணைகளில் குளறுபடி ஏதும் இல்லை என்று உறுதி செய்யப்பட்டது.
“சிங்கப்பூர் போலிஸ் படை அதிகாரிகள் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டும். அவர்கள் உயர்தர நடத்தை மற்றும் நேர்மை குணத்தைக் கொண்டிருக்க வேண்டும். சட்டத்தை மீறும் அதிகாரிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
“அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் சுமத்துவதும் அதில் அடங்கும்,” என்று சிங்கப்பூர் போலிஸ் படை தெரிவித்தது.
ஒவ்வோர் ஊழல் குற்றச்சாட்டுக்கும் ஐந்தாண்டு வரை சிறைத் தண்டனையும் $100,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம்.