மூன்று மாத வீழ்ச்சிக்குப் பின்னர் சிங்கப்பூரின் உற்பத்தித் துறை கடந்த மாதம் வளர்ச்சி கண்டது. இரண்டை தவிர்த்து மற்ற எல்லா துறைகளிலும், குறிப்பாக மின்னியல் துறையில் எழுச்சி ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்தத் துறையின் வளர்ச்சி சாத்தியமானது.
இது பொருளியல் துறை பகுப்பாய்வாளர்களின் எதிர்பார்ப்பையும் கடந்த வியப்புக்குரிய செயல்பாடு.
இவ்வாண்டுக்கான முன்னுரைப்பை அவர்கள் மேம்படுத்திய நிலையில் அவர்களின் கணிப்பையும் இவ்வளர்ச்சி மிஞ்சியது.
ஆண்டுக்காண்டு அடிப்படையில் தொழில்துறை உற்பத்தி கடந்த மாதம் 13.7 விழுக்காடு வளர்ச்சி கண்டதாக பொருளியல் வளர்ச்சிக் கழகம் அதன் அறிக்கையில் தெரிவித்தது.
மே மாதத்தில் 8.3 விழுக்காடு, ஜூனில் 6.4 விழுக்காடு, ஜூலையில் 7.6 விழுக்காடு என வரிசையாக மூன்று மாதங்கள் அத்துறை சரிவைக் கண்டிருந்தது.
நான்காவது மாதத்தில் கண்டிருக்கும் வளர்ச்சி உயிர்மருத்துவ உற்பத்தியைத் தவிர்த்துப் பார்த்தால் 15.3 விழுக்காடு என்றது கழகம்.
மாத அடிப்படையில் பருவத்திற்கேற்ப சரிக்கட்டப்படும் தொழிற்சாலை உற்பத்தி ஆகஸ்ட் மாதம் 13.9 விழுக்காடு வளர்ந்தது. உயிர்
மருத்துவ உற்பத்திக்கு அப்பாற்பட்ட இதன் வளர்ச்சி 4.8 விழுக்காடு. பொதுத் தயாரிப்பு, போக்கு
வரத்து பொறியியல் ஆகிய இரு துறைகளில் கொவிட்-19ன் தாக்கம் தொடர்ந்து தென்படுகிறது. இருப்பினும் மின்னியல் துறை கடந்த மாதம் அற்புதமான வளர்ச்சியைக் கண்டது. ஆண்டுக்கு ஆண்டு என்னும் அடிப்படையிலான அதன் வளர்ச்சி 44.2 விழுக்காடு.
பகுதி மின்கடத்தித் துறையின் பங்களிப்பே இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம் என்றது கழகம். மெய்நிகர் சேவைகள், தரவு நிலையங்கள், ஐந்தாம் தலைமுறை கட்டமைப்புக்கான சந்தை ஆகியவற்றிடமிருந்து எழுந்த தேவைகளுக்கு இடையில் பகுதி மின்கடத்தித் துறை 56.9 விழுக்காடு வளர்ச்சி கண்டது.
உற்பத்தித் துறை வளர்ச்சி கண்டதாக வெளியான அறிக்கையைத் தொடர்ந்து யுஓபி வங்கி அதன் முழு ஆண்டுக்கான தொழில் துறை உற்பத்தி முன்னுரைப்பை -2 விழுக்காடு என்பதில் இருந்து +2.5 விழுக்காடு என மேல்நோக்கி திருத்தியது.
மூன்று மாத சரிவுக்குப் பின்னர் ஆகஸ்டில் 13.7% வளர்ச்சியுடன் மீண்டது